பொன் விளைந்த களத்தூர, முன் குடுமீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுகுன்றம் வட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து 10 கி. மீ. தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : முன் குடுமீஸ்வரர்
இறைவி : மீனாட்சி அம்மன்
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : வில்வ தீர்த்தம்
தலச் சிறப்புகள் : கருவறையில் சிவலிங்கம் புடைத்த முன்குடுமியுடன், வேறெங்கும் இல்லாத அபூர்வக் கோலத்தில் காட்சியளிக்கிறது. தனி சன்னதியில் மீனாட்சியம்மன் அருளாட்சி புரிகிறார்.
தல வரலாறு : ராஜேந்திர சோழன் காட்டியது. 20 ம் நூற்றாண்டில் கோதண்டஇராமசுவாமி ராமசாமி ஆலயத்தில் தர்பாசயனே சேதுராமர் சன்னதி நிறுவப்பட்டது. தர்பாசயன சேதுராமரின் மூலாதாரம் சேலம் விஜயராகவாச்சாரியரின் பேரனாலேயே நிறுவப்பட்டது, அகோபில மடத்தின் 44 வது ஜீயரால் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. கோதண்ட இராமர் கோவில் திரு பட்டாபிராமரின் , திரு தேவி மற்றும் பூதேவி, தாயார் சன்னிதி, ஆழ்வாா்கள் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, சக்கரத்தாழ்வாா் சன்னதி நரசிம்மர் கோயில் மற்றும் கோதண்ட இராமசாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் அழகான தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, துரியோதனனின் அழிவை குறிக்கும் கொண்டாட்டம் தர்மராஜா கோயிலில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான சீற்றம் மிகுந்த, கூற்றுவ நாயனார் அவதரித்தது இந்த ஊர்தான். நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர்; ஊனக்கண் தெரியாமல் போனாலும் ஞானக் கண்ணால் இந்த உலகைப் பார்த்த அந்தகக் கவி வீரராகவ முதலியார், தொண்டை மண்டல சதகம், புள்ளிருக்கு வேளூர் கலம்பகம் போன்ற அரும்பெரும் நூல்களைப் படைத்த படிக்காசுப் புலவர், நாக்பூர் காங்கிரஸ் மகாநாட்டில் தலைமையேற்ற சேலம் விஜயராகவாச்சாரியார் போன்றோர் பிறந்ததும் இந்த ஊர்தான்.
சோழன் என்றாலே அவர்களது சிவபக்திதான் முதலில் அனைவருக்கும் நினைவு வரும். பொன்விளைந்த களத்தூரை ஆண்ட சோழமன்னனும் அப்படித்தான். அப்படி ஒரு பக்தி. அதுவும் பெருந்திருக்கோயில் என்று வழங்கப்படும் இந்தக் கோயில் இறைவன் மீது மாறாத பக்தி. தினமும் காலையும் மாலையும் இறைவனுக்குச் சாற்றிய மலர் மாலை அரசனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். பல்லாண்டுகளாய் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார் ஆலய அர்ச்சகர்.
அர்ச்சகரின் மனைவிக்கு அந்த விபரீத ஆசை எழுந்தது. `தினம், தினம் என் கணவர் பூஜிக்கும் இறைவனின் மாலை அரசனுக்குத்தானே செல்கிறது அதனை இன்று மட்டும் நான் சூடிக்கொண்டால் என்ன?' என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்போல் அந்த மாலையை எடுத்து தான் அணிந்துகொண்டாள். அழகு பார்த்தாள். அதற்குள் அரசவைப் பணியாளர் வந்துவிடவே அவசர அவசரமாய் மாலையை எடுத்து ஒன்றும் தெரியாததுபோல் கொடுத்து அனுப்பினாள். அவளுடைய நீண்ட தலைமுடி ஒன்று அந்த மாலையில் சிக்கிக் கொண்டது அவளுக்குத் தெரியாது. மன்னன் கைக்கு மாலை போயிற்று. முதலில் அவன் கண்களில் பட்டது அந்த நீள தலைமுடிதான். வெகுண்டான் அரசன், அர்ச்சகரை அழைத்து காரணம் கேட்டான். பயந்து நடுங்கிய அவர் அந்தப் பொய்யை வேறு வழியின்றி சொன்னார் ``மன்னா, நம் கோயில் சிவலிங்கத்தின் தலையில் சிகை இருக்கிறதே. அதில்தான், ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது'' என்றார்.
அரசன் நாளைக் காலை ஆலயம் வருவேன். இறைவனாரின் கேசத்தைக் காட்டாவிட்டால், உன் சிரம் அறுக்கப்படும் என்று கர்ஜித்தான். அர்ச்சகரின் மனைவிக்குத் தான் செய்த பிழையால் தன் தாலிக்கே பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது. இருவரும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு தங்கள் பிழை பொறுத்து, காக்குமாறு கதறினார்கள். அஞ்சவேண்டாம். நான் உங்களை மன்னித்தேன். நாளை வாருங்கள் என்று அசரீரி எழுந்தது. சொன்னபடி மறுநாள் காலை, அரசன் ஆலயத்திற்கு வந்துவிட, அங்கே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. அத்தனை நாட்களும் மொழுமொழுவென்று இருந்த சிவலிங்கத்தின் தலையில் கூந்தல் பளபளக்க முன்குடுமி முளைத்திருந்தது. அதனைக் கண்டு அரசன் பரவசமடைந்தான். ஆலய பூஜைகள் மேலும் சிறக்க ஏராளமான பொன்னும் பொருளும் அளித்தான். இன்றைக்கும் பொன் விளைந்த களத்தூர் சென்றால் இறைவன் முன்குடுமியுடன் காட்சி தருவதை காணலாம். சுந்தரேஸ்வரர் என்ற அவரது பெயரே, இப்போது முன் குடுமீஸ்வரர் என்று ஆகிவிட்டது.
கோவில் அமைப்பு : கூரையின்றி, நான்கு கருங்கல் தூண்கள் மட்டும் நடப்பட்டிருக்க, அதன் நடுவில் வெய்யிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், இறைவனையே பார்த்துக்கொண்டிருக்கும் நந்தியை காணலாம். இங்கே ராஜகோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயில்கள். தெற்கே அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள நுழைவாயிலையே மக்கள் பயன்படுத்துகிறார்கள். விநாயகர், முருகன், துர்க்கை, நவகிரகங்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்கள். கோயிலெங்கும் ஏராளமான கல்வெட்டுகள் காட்சியளிக்கின்றன ஒரு தேவதாசி இந்தக் கோயிலுக்கு கொஞ்சம் நிலமும், சண்டிகேஸ்வரர் சிலையும் கொடுத்ததாக ஒரு கல்வெட்டு. தூண்களிலும் கண்கவர் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்கண்டேயர், மகிஷாசுரமர்த்தினி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஊரில் பிறந்த கூற்றுவ நாயனாருக்கு தனி விக்ரஹமும் உண்டு.
தெரியாம நாம ஏதாவது தப்பு செஞ்சுட்டா ரொம்ப வருத்தப்படுவோம். கவலைப்படுவோம். ராத்திரி தூக்கம் வராம அவதிப்படுவோர் இந்த ஊருக்கு வந்து, முன்குடுமீஸ்வரரை வணங்கினாப் போதும்.
காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை