வேலூர், ஜலகண்டேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் மாநகரின் மையப் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில், வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே கோயில் அமைந்துள்ளது. காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது.
இறைவன் : ஶ்ரீஜலகண்டேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்
இறைவி : ஶ்ரீஅகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரணி
தல சிறப்புகள் : சிவன் உருத்ராட்சப் பந்தலின் கீழ் காட்சி தருகிறார். நோய் நீக்குபவராக அருளுவதால், “ஜுரகண்டேஸ்வரர்” என்றும் பெயருண்டு. பக்தர்கள் இவருக்கு அதிகளவில் ருத்ராபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, அவர்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தைக் காணிக்கையாகச் செலுத்தி வணங்கும் வழக்கமும் இருக்கிறது. இவரை வேண்டி அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.
தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்டர், அகஸ்தியர், கௌதமர், பரத்வாஜர், வால்மீகி, காசியபர் அத்ரியார் ஆகிய சப்தரிஷிகள் வேலூருக்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி மலையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனர். பின்னர் அகத்தியர் மட்டும் வேலூரில் வழிபட்டு வந்தார். இறுதியில் அவரும் சென்றுவிட, சிவலிங்கம் கவனிப்பார் இன்றி புற்றால் மூடப்பட்டது. கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள பத்ராசலம் என்ற ஊரில் எத்தம ரெட்டிக்குப் பிறந்த மகன்கள் பொம்மிரெட்டி, திம்மி ரெட்டி ஆகியோர், சோழ வம்ச அரசரிடம் தானமாகப் பெற்ற வேலப்பாடி பகுதியில் குடியேறினர். அடர்த்தியான வனப் பகுதியின் புற்றிலிருந்த 5 தலை நாகம், 5 காம்புகள் கொண்ட பசுவின் மடியிலிருந்து தினசரி பால் குடிப்பதை அறிந்த பொம்மி, அங்கேயே படுத்துறங்கினார். அப்போது கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அங்கிருப்பதை உணர்த்தினார். அதையடுத்து சிவபெருமானுக்கு 1193-ம் ஆண்டு பங்குனி 19-ம் தேதி கோயில் கட்டும் பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. பள்ளிகொண்டராயமலையில் இருந்து யானைகள் மூலம் கற்கள் கொண்டு வரப்பட்டன. கோயில் கட்டுமானப் பணி தொடங்கிய நேரம் சரியில்லை என்பதால், கோயிலைச் சுற்றி அகழியோடு கூடிய கோட்டையை கட்ட முடிவு செய்யப்பட்டது. கோட்டையையும், கோயிலையும் கட்டிய பொம்மி, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஜ்வரகண்டேஸ்வரர் எனப் பெயரிட்டார். தனி சன்னதி அமைத்து அம்பாளுக்கு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என பெயரிட்டார்.
கோயிலைச் சுற்றியிருந்த வேலமரங்களை அழித்து, நகரை உருவாக்கினார். அதனால், இந்நகருக்கு வேலை ஊர் எனப் பெயரிட்டார். காலப்போக்கில் அது வேலூர் எனப் பெயர் மருவியது. விஜயநகரப் பேரரசரான சதாசிவ தேவ மஹாராயரால் கிபி.1542-1565 வரை இக்கோயிலின் மதில்கள், கோபுரங்கள், திருமண மண்டபங்கள் முதலானவை கட்டப்பட்டன. கிபி.1612-ல் மொகலாயர்கள் ஆட்சி ஏற்பட்டதும், பீஜப்பூர் சுல்தான்கள், முஹமது கான் ஆகியோர் ஆட்சியில் கோயிலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. முஹமது கானுக்குப் பின் வந்த அப்துல்லா, சிவலிங்கத்தைக் கோட்டையின் அகழிக்குள் வீசினார். பின்னர் மராட்டிய மன்னர் துக்கோஜி ராவ், மீண்டும் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்தார். அதுமுதல், நீரில் குடியிருந்த ஈஸ்வரன் எனப் பொருள்படும்படி “ஜலகண்டேஸ்வரர்” என ஸ்வாமி அழைக்கப்பட்டார்.
18-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மீண்டும் மொகலாயர்கள் படையெடுப்பின்போது, சிவலிங்கம் சேதப்படுத்தப்படும் என அஞ்சிய இந்து வீரர்கள், ஜலகண்டேஸ்வரரைப் பெயர்த்து எடுத்து, வேலூர் அடுத்துள்ள சத்துவாச்சாரிக்குக் கொண்டு சென்றனர். 200 ஆண்டுகளாக “கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கம்” என்ற பெயரிலேயே சத்துவாச்சாரியில் அச்சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு வேலூர் கோட்டை வந்தபோது கோயில் கருவறை மண்டபத்துள் எந்த சிலைகளும் இல்லை. கோயிலில் மீண்டும் சிலைகளை வைத்து வழிபட இந்து சமயத்தினர் 1928-ம் ஆண்டு முயற்சி எடுத்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி, சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கம் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுமுதல் கோயிலில் நித்திய கால பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கோயில் அமைப்பு : கிழக்குப் பக்கத்தில் மட்டுமே நுழைவாயில் உள்ளது. தற்போது கோட்டை அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் பக்கத்தில் தண்ணீர் இல்லை. இக்கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட இதன் ஒரு பாணி விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி நிலையைக் கொண்டுள்ளது. தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது. அதன் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோயிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் கோயில் சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூணைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம் முழு நீளத்திற்கும் அமைந்துள்ளது. கோயிலின் வடமேற்கில் வசந்த மண்டபத்தையும் அதை ஒட்டி கிணற்றையும் வடகிழக்கில் வெளிப்பிரகார யாகசாலையும் அடுத்து தென்கிழக்கில் உத்சவ மண்டபத்தையும் வெளிப்பிரகார மடப்பள்ளியையும் காணலாம். உள்ளே நுழையும் போது வலம்புாி விநாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
வலம்புாி விநாயகரைத் தாிசித்து மேலே சென்றால் கோயிலின் நிர்வாக அலுவலகம் உள்ளது. இதனைத் தொடர்ந்து உட்பிரகார மடப்பள்ளி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள், பிள்ளையார், சப்தகன்னியர், வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர். இரண்டு பிரகாரங்களை வலம் வந்து மூன்றாம் பிரகாரமான மகாதேவர் சன்னதிக்கு நுழையும் போது நடராஜர் சன்னதி உள்ளது. நடராஜர் சன்னதியிலிருந்து விரிஞ்சிபுரம் அருள்மிகு வழித்துணைநாதர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் வளாகம் அருள்தரும் மரகதவல்லி அம்மையார் சன்னதிக்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது. சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனா உற்சவமூர்த்திகளைக் கண்டு தாிசித்து மேலும் சென்றால், மிக கம்பீரமாகவும் நெடிதுயர்ந்தும் துவாரபாலகர்கள் நின்ற திருக்கோலத்தைக் காணலாம். இவர்களைக் கடந்தால் ஜலகண்டேஸ்வரர் லிங்கத் திருமேனியாக இருப்பதைக் காணலாம். கோயிலின் கிணற்றின் அருகே கங்கா பாலாறு ஈஸ்வரனும், அதன் அருகே கால பைரவரும் அடுத்து, நவக்கிரக சந்நிதியும், சனீஸ்வரரும், நந்திதேவரும் உள்ளனர். அடுத்து கொடி மண்டபமும் உள்ளது. தொடர்ந்து விநாயகர், வெங்கடேசப்பெருமாள், வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, கால பைரவர், சனீஸ்வரர், 63 நாயன்மார்கள், நடராஜர், சிவகாமி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிரம்மா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர்.
மூலவர் சன்னதியின் முன்பாக கொடி மரம் மற்றும் பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. அருகில் நந்திதேவர் உள்ளார். அம்மன் சன்னதி சுவர்களில், விநாயகர், மாதேஸ்வாி, வைணஷ்ணவி, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்ரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன. அம்பாள் சன்னதியின் இருபுறமும் கம்பீரமாக துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னதியின் எதிரே 1981 ஆம் ஆண்டு மயிலை குருஜி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நவசக்தி ஜோதி என்னும் நந்தாவிளக்குகள் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி கோடி தீபம் என்ற இலக்கை நோக்கி தீபங்கள் ஏற்றப்படுகின்றன. கோயிலின் முதல் கோபுர நுழைவாயிலின் இரண்டாவது நிலையில் வலது தூணில் மேற்குப்புறம் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் உயர்ந்து காணப்படுவது சதாசிவ தேவமகாராயர் மன்னராவார். அருகில் உள்ள சிறிய உருவம் சின்ன பொம்மு நாயக்கர் ஆவார். இக்கோயிலின் உட்பகுதியும், உட்சுவருடன் கூடிய உள்கோட்டைப் பகுதியும் "வென்று மண் கொண்ட சம்புவராயர்" காலத்தில் கட்டப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாகக் காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, பின்பு வீதியுலா செல்வர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில், “அணையா நவசக்தி ஜோதி தீபம்” இருக்கிறது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன், சுத்த அன்ன நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடக்கிறது. அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி காட்சி தருகின்றனர். மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம் என்பது மேலும் விசேஷம். இஙகுள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை. இவருக்கு மாட்டுப்பொங்கலன்று விசேஷ பூஜை உண்டு.
ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம், அம்பிகைக்கு காய்கறி, பழங்களால் அலங்கரிக்கும் “சாகம்பரி” உற்சவமும் நடக்கிறது. இவ்வேளையில் சிவன், அம்பிகையை தரிசித்தால் அன்னத்திற்கும், விளைபொருட்களுக்கும் குறையில்லாத நிலை ஏற்படும் என்பர். பிரகாரத்தில் கங்கை நதி, கிணறு வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் சிவன், “கங்கா பாலாறு ஈஸ்வரர்” என்ற பெயரில் காட்சி தருகிறார். இவர் இந்த கிணற்றில் கிடைக்கப்பெற்ற மூர்த்தியாவார். கங்கை நதியே இங்கு பொங்கியதாகச் சொல்கிறார்கள். இந்த இலிங்கம், சற்றே கூம்பு போல காட்சியளிக்கிறது. இந்த சிவனுக்கு பின்புறத்தில் பைரவர் இருக்கிறார். இவ்வாறு காசி அமைப்பில் சிவன், கங்கை தீர்த்தம், பைரவர் என மூன்றையும் இங்கு தரிசிக்கலாம். இவரது சன்னதியில் தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள். இதனை பக்தர்களே சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். இங்கு வேண்டிக்கொள்ள, காசியில் விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, நான்கு சீடர்களுடன் உற்சவராக இருக்கிறார். சனீஸ்வரரும் ஜேஷ்டாதேவி, மாந்தியுடன் உற்சவமூர்த்தியாகக் காட்சி தருகிறார். சனி, குரு பெயர்ச்சியின்போது இவ்விருவருக்கும் விசேஷ ஹோமங்கள் நடக்கும். மன்னர் பொம்மி, சிவனுக்கு கோயில் எழுப்பியபோது சுற்றிலும் ஒரு பிரமாண்டமான கோட்டையைக் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம், மேல் விதானத்தை தாங்கும் கிளிகள் என கண்ணைக்கவரும் பலவிதமான சிற்பங்கள் இருக்கிறது. சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தின் அழகில் லயித்த வெள்ளையர் தளபதி ஒருவர், தூண்களோடு பெயர்த்துச் செல்ல விரும்பினார். இதற்காக வெளிநாட்டிலிருந்த கப்பலையும் வரவழைத்தார். ஆனால், அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால், இத்திட்டத்தைக் கைவிட்டார். இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும்.
ஆதிசங்கரர், பிரகாரத்தில் இருக்கிறார். சித்திரையில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு வேண்டிக்கொள்ளலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆண்டுதோறும் ஸ்ரீநடராஜருக்கு 6 அபிஷேகங்கள், 63 நாயன்மார்களுக்குக் குருபூஜை விழா,மார்ச்ல் ஜலகண்டேஸ்வரர் பெருவிழா, ஆடிப்பெருக்கு கங்கா பாலாற்றீசுவரர் ஆண்டு விழா., ஆடிக் கிருத்திகை பெருவிழா சிறப்பு அலங்காரம், கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : காட்பாடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு