அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், (சேண்பாக்கம்)
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கத்தில் செல்வ விநாயகர் ஆலயத்தில் பதினொரு சுயம்பு கணபதிகள் அமைந்துள்ளனர். ஒம்கார வடிவில் அமைந்துள்ள இவ்விநாயகர்கள், விநாயகருக்கு உரிய முழு வடிவில் இல்லாது, உருண்டையான கல் உருவிலேயே அமைந்துள்ளனர்.
மூலவர் : செல்வ விநாயகர்
தல விருட்சம்: வன்னி மரம்
தல சிறப்பு: 11 சுயம்பு மூர்த்திகள்: மூலஸ்தானத்தில் உள்ள 11 விநாயகருக்கும் தனித்தனியே பெயர் உள்ளது. பால விநாயகர், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர்.
இதில் பால விநாயகர் எப்போதும் நீரில் மூழ்கியபடி காட்சி தருகிறார். ஆறாவதாக வீற்றிருக்கும் செல்வ விநாயகருக்கு தான் அபிஷேகமும், ஆராதனையும். நடைபெறுகிறது.
பதினாறு வகை செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான 11 செல்வங்களை அள்ளித்தரும் வள்ளலாக 11 விநாயகர்கள் உள்ளனர். "விநாயக சபை' என்று இந்த அமைப்புக்கு பெயரிட்டுள்ளனர். இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் செண்பக காடாக இருந்ததால் இப்பகுதி செண்பகவனம் என அழைக்கப்பட்டு பின் "சேண்பாக்கம்' என்று அழைக்கப்பட்டதாகவும், சுயம்புவாக விநாயகர் சபை அமைத்து இருப்பதால் "ஸ்வயம்பாக்கம்' என இத்தலத்திற்கு பெயர் வந்ததாகவும், அதுவே மருவி சேண்பாக்கம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு: மூல ஸ்தானத்தில் செல்வ விநாயகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.திருமேனி வளர்ந்து கொண்டே இருக்கிறதாம்.ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.ஈசான்ய மூலையில் நவகிரக சன்னதி - சனீஸ்வரர் மூலவரை பார்த்த படி எழுந்துஅருளிகிறார்.
பிரார்த்தனை : திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவக்கிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை: ஆதிசங்கரர் வழிபாடு: ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்புமூர்த்திகள் இருப்பதை அறிந்து இத்தலம் வந்தார். 11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் ஞான திருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரின் வழிபாட்டிலிருந்தே இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும். இந்த யந்திரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு.
யானை வாகனம்: பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகருக்கு எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஒவ்வொரு விநாயகருக்கும் மூஷிக வாகனங்களை பிரதிஷ்டை செய்தனர். பதினொரு விநாயகர், யானை மற்றும் மூஷிக வாகனங்கள், கொடிமரம் ஆகியவற்றை சேர்த்து பார்க்கும் போது, "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் அமைப்பில் தெரியும். தேவர்கள், ரிஷிகள் தினமும் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. அதற்கு வசதியாக மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது. கோயில் கொடிமரம் மற்ற கோயில்களைப் போல் வெளியே இல்லாமல், மூலஸ்தானத்திலேயே அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.
இங்கு அனைத்துமே சுயம்பு என்பதால் ஒவ்வொரு விநாயகரையும் அந்தந்த பெயரில் சுதையில் வடித்து கோயில் சுற்று சுவரில் வைத்துள்ளார்கள். விநாயகரின் பின்புறம் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், அன்னை காமாட்சியும் உள்ளனர். இங்கு இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உண்டு. அதில் ஒருவர் விநாயகரைப்போலவே சுயம்பு மூர்த்தி. தல விருட்சமாக இருக்கும் வன்னிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. கோயில் உருவான காலத்திலிருந்தே இருக்கும் இந்த மரம் மிகப்பெரிதாக வளர்ந்துள்ளது. விநாயகர் கோயிலில் வன்னிமரம் இருப்பது மிகவும் விசேஷமானது. வன்னிமரத்தின் அதிபதி சனீஸ்வரன். எனவே சனி தோஷம் உள்ளவர்கள் இந்த பழமையான மரத்தை வழிபாடு செய்து பலனடைகிறார்கள். இதற்கு தனியாக விஜயதசமி நாளில் சிறப்பு பூஜையும் உண்டு.
தல வரலாறு: மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது சாரட்டில் இவ்வழியாக நின்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்புளித்தது. பயந்து போன துக்காஜியிடம் விநாயகரின் அசரீரி தோன்றி, ""இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வா,'' என்றது. அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் சாரட் வண்டி சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காட்பாடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு