ஆவணியாபுரம், சிம்மபுரீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலையில் உள்ள ஆவணியாபுரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் இருந்து காஞ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 66 கி.மீ அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு கடந்தால் இத்தலத்தை அடையலாம். வேலூர், காஞ்சிபுரம், வந்தவாசி என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அவணியாபுரம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன் : சிம்மபுரீஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை
தல விருட்சம் : வில்வம், மகிழம் மரம்
தல சிறப்புகள் : தலத்தின் கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. அதன் மேல் மரகதத் திருமேனி அமைந்திருப்பதே இக்கோவிலில் சிறப்பாக கருதப்படுகிறது. இதனருகே தெற்கு நோக்கியவாறு மங்களாம்பிகை அம்பாள் சன்னிதி உள்ளது. மூலவர் சன்னிதிக்கு முன் நந்தீஸ்வரர் காட்சியளிக்கிறார். பன்னிரு கரங்களுடன் முருகப் பெருமாள் திருவுருவம் பெருமாளின் அம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு உரிய தலமாக கருதப்படும் இக்கோவிலில் வந்து வழிபடுவதன் மூலம் தொழில், வர்த்தகம், குடும்பம் என அனைத்திலும் தலைசிறந்தவராக உருவெடுக்கலாம் என்பது நம்பிக்கை.
தல வரலாறு : முற்காலத்தில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்ட ஆவணியாபுரத்தில் ஏரண்ட முனிவரால் நிறுவப்பட்ட சிம்மபுரீஸ்வரர் இறைவன் வீற்றிருந்த கோவில் சிதிலமடைந்து மறைந்து போனது. பின், ஆதிசங்கர பகவத்பாதர் புண்ணிய யாத்திரை மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முனிவர், தான் இப்பகுதியில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்ததையும், தற்போது அக்கோவில் அழிந்துவிட்டதையும் கூறியுள்ளார். இதனை உணர்ந்த சங்கரரும், மண்ணில் புதையுண்டு கிடந்த அந்த லிங்கத்தை மீட்டெடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இதனாலேயே இத்தல ஈசனுக்கு அவணீருவரர் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு இத்தலம் பல்லவ மன்னர்களால் கி.பி.9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் மூலம் கணிக்கப்படுகிறது. கல்வெட்டுக்களில் இந்த ஊர் நாராயணமங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவோர் இத்தலத்தில் உள்ள அவணீஸ்வரர் என்ற சிம்மபுரீஸ்வரரை வழிபட்டுச் சென்றால் ஒரு சில வாரங்களிலேயே கூடுதலான லாபத்தைச் சந்திக்க முடியும். மேலும், திருமணத் தடையுடையோர், குழந்தை பாக்கியம் அற்றோர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த விரத நாட்களான பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்டவை இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று இங்கு நடைபெறும் வழிபாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்த பங்கேற்று அருள்பெறுவர். நேர்த்திக்கடன் வேண்டியவை யாவும் நிறைவேறியதும் மூலவர் மற்றும் அம்பாளுக்கு புது ஆடைகள் காணிக்கையாக வழங்கி, பால், பழம், திருநீர், சந்தனம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து மாலையிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம் , மேல்மருவத்தூர், திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு