தர்மலிங்க மலை, தர்மலிங்கேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு மெயின் ரோட்டில் மதுக்கரை மரப்பாலம் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது அமைந்துள்ளது.
இறைவன் : தர்மலிங்கேஸ்வரர்
தல விருட்சம் : வில்வமரம்
தல சிறப்புகள் : இருபுறம் துவார பாலகர்கள் காவல் நிற்க, உள்ளே கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு : ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் விநாயகர் கோயிலும், நவகிரக சன்னதியும் உள்ளது. நவகிரக சன்னதி அருகில் மும்மூர்த்தி மரம் என்ற மாமரம் இருக்கிறது. இந்த மரத்தில் மூன்று வகை சுவையுடைய மாங்கனிகள் காய்க்கிறது. விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒரு மண்டபமும், அதை அடுத்து மிகப்பழமையான புற்று ஒன்றும் உள்ளது. இந்த புற்றில் வயது முதிர்ந்த சர்ப்பம் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனருகே கடுமையான வறட்சி காலத்திலும், வற்றாமல் நீர் சுரந்து கொண்டிருக்கும் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து தான் மலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலைப் படிக்கட்டு வழியே நடந்து சென்றால் அரை மணி நேரத்தில் மலையின் உச்சியை அடைந்து விடலாம். சுவாமியின் எதிர்புறத்தில் நந்தியும், வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். இப்பகுதியில் வாழும் மலை ஜாதி மக்கள் இவரை குல தெய்வமாக வழிபடுகிறார்கள்.
இந்த மலையின் அடிவாரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. அதையொட்டி ஒரு திருமண மண்டபம் உள்ளது. திருமண மண்டபத்திற்கு மேல் பகுதியில் இயற்கை வழிபாடாக புற்று வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்ணாந்து பார்த்தால் மலையின் உச்சியில் தருமலிங்கேஸ்வரர் ஆலயம் நம் கண்களுக்குத் தெரியும். சுமார் 100 படிகளைக் கடந்தவுடன் மூன்றடுக்கு ராஜ கோபுரம் உள்ளது. அழகான அந்த கோபுரத்தைக் கடந்து மேலே நடந்தால், அடியார்சாமி கோவில் வரும். அதைக் கடந்து நாம் சீரற்ற படிகளைக் கடந்துதான் நடக்க வேண்டும். சில இடங்களில் படிகளே இல்லாமல் சரட்டென்று சரிவாய் இருக்கும் கருங்கற்களில் தைரியமாக காலை வைத்துதான் மேலே ஏற வேண்டும்.
சுற்றிலும் சில இடங்களில் அடர்த்தியும், சில இடங்களில் அடர்த்தி இல்லாத மரங்களின் கூட்டங்கள். அந்த மலைத் தொடரில் யானை, மான், செந்நாய், மலைப் பாம்பு, மயில் போன்ற விலங்குகள் நடமாடுவதுண்டு. மலைப்பாதை முழுவதும் நேரே நடந்து வலதுபுறம் திரும்பி மறுபடியும் நடந்து வலது புறம் திரும்பி, மீண்டும் நடந்து மீண்டும் திரும்பினால் தருமலிங்கேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். முதலில் ஸ்தூபியும் கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம். நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன. சுமார் 1,000 அடி உயரத்தில் இருக்கும் இறைவனை தரிசிக்க நாம் சுமார் 818 படிகளை கடந்து செல்ல வேண்டும். மாலை ஆறு மணிக்கு மேல் மலைமீது ஏற அனுமதியில்லை. கோவையிலிருந்து இத்தலம் செல்ல நிறைய பேருந்து வசதிகளும், ஆட்டோ, கால் டாக்ஸி வசதிகளும் உள்ளன.
தல வரலாறு : மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதை காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த கிரிவலத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்படும் கிரிவல பக்தர்கள் சுமார் 6 கி.மீ தொலைவு நடந்து மலையை சுற்றி வர வேண்டும். சித்திரை பவுர்ணமியில் நடைபெறும் கிரிவலத்தில் சுமார் ஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வது நம்மை வியக்க வைக்கும் உண்மை.
தினசரி இங்கு காலை பூஜை நடக்கும் போது ஒரு புதுமுறை கையாளப்படுகிறது. ஒரு தட்டில் நிறைய உதிரிப்பூக்களுடன் கருவறையை விட்டு வெளியே வரும் அர்ச்சகர் வெளியே நிற்கும் பக்தர்கள் அனைவர் கரங்களிலும் பூக்களை அள்ளித் தருகிறார். பின் அனைவரையும் தங்கள் விருப்பம் போல் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். பிறகு அந்தப் பூக்கள் அனைத்தையும் ஒரு தட்டில் திரும்ப வாங்கிக் கொண்டு கருவறையின் உள்ளே செல்கிறார். கருவறையில் உள்ள தருமலிங்கேஸ்வரருக்கு அந்த உதிரி மலர்களாலேயே அர்ச்சனை செய்வது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். இந்த மலைக் கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மாத பவுர்ணமி நாட்கள், பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலிய நாட்களில் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆலயத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. முதல்நாள் மதுக்கரை ஊர்மக்களும், இரண்டாம் நாள் திருமலையம்பாளையம், மூன்றாம் நாள் எட்டிமடை மக்கள் என மூன்று நாட்களும் மூன்று ஊர்மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்து மகிழ்கின்றனர். குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை