இடிகரை, வில்லீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 13 கி.மீ தூரத்தில் துடியலூர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இடிகரை அமைந்துள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்பாளையத்துக்கு நகரப் பேருந்துகள் இருக்கிறது. இடிகரைக்கு துடியலூரில் இருந்து மினி பேருந்து வசதி இருக்கிறது.
இறைவன் : வில்லீஸ்வரர்
இறைவி : ஸ்ரீவேதநாயகி
தல சிறப்புகள் : சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர்கோடுகள் உள்ளன. ஆவணி 14,15,16 தேதிகளில் சூரியன் தனது கதிர்களை இந்த லிங்கத்தின் மீது பரப்பி பூஜை செய்கிறார் . இந்த கோயிலில் உள்ள நவகிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் உள்ளது சிறப்பு . மேலும் இங்கு பக்தர்கள் தங்கள் குறைகளை எழுதி அர்ச்சகரிடம் சமர்பிக்கின்றனர். அவர் அதை லிங்கத்தின் முன்னால் வைக்கிறார் . அந்த குறைகள் முப்பது நாட்களில் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஸ்ரீவில்லீஸ்வரர், ஸ்ரீபாலசுப்ரமணியர், ஸ்ரீவேதநாயகி ஆகிய மூவரும் ஒரே வரிசையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலம், சோமாஸ்கந்த மூர்த்தி வடிவம் என்பார்கள் இந்த அமைப்பு அபூர்வமான ஒன்று.
தல வரலாறு : மன்னர்களின் காலத்தில் இருந்தே இடிகரை என்ற பெயர் கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் இந்த ஊருக்கு இருகரை என்ற இன்னொரு பெயரும் இருப்பதாக சொல்கிறார்கள். இதேபோல், கொங்கு நாட்டின் பல பகுதிகளையும் சோழர்களின் பிரதிநிதிகள் ஆண்டு வந்தனர். இவர்கள் கொங்குச் சோழர்கள் எனப்பட்டனர். கரிகாற் சோழனால் கட்டப்பட்ட இடிகரை வில்லீஸ்வரர் கோயிலை கொங்குச் சோழர்களுள் ஒருவனான விக்கிரம சோழன் புதுப்பித்தான்.
மன்னன் கரிகாலனுக்கு நாடு நலம் பல புரிந்தாலும், வீடு மட்டும் வினையைத் தந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் மன்னன் ரொம்பவே மனம் நொந்து போனான். மன்னனின் வாட்டம் அறிந்த மந்திரிமார்கள், குறி சொல்வதில் தேர்ந்த குறத்தி ஒருத்தியை அரண்மனைக்கு அழைத்து வந்தார்கள். மன்னனின் முகக் குறிப்பு அறிந்த குறத்தி நேர்த்தியாக அதற்கொரு பரிகாரமும் சொன்னாள்: கொங்கு நாட்டில் மக்களைக் குடி அமர்த்தி, கோயில் கட்டி, குளமும் வெட்டி வைத்தால் மாமன்னரின் மன வாட்டம் நீங்கும் அதற்குரிய பரிசை வாங்கிக் கொண்டு குறத்தி வெளியேறினாள். அதன்படி சேனைகளுடன் புறப்பட்டான் கரிகாலன். குறத்தி குறிப்பிட்ட பகுதியை அடைந்தான். காடுகளை வெட்டி ஊர் ஆக்கினான். நீர்வளம் பெருகக் குளம் வெட்டினான். அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து மக்களையும் அழைத்து வந்து குடியமர்த்தினான். அந்த கிராம நிர்வாகத்துக்குப் பொருத்தமான அதிகாரிகளையும் நியமித்தான். இப்படி கொங்கு தேசத்தில் தொடர்ச்சியாக முப்பத்தாறு பெரிய ஆலயங்களும் முந்நூற்றுஅறுபது சிறு ஆலயங்களும் முப்பத்திரண்டு அணைகளும் கட்டித் திருப்பணி செய்து தன் சொந்தத் துயரம் போக்கினான். இப்படி மன்னன் கரிகாலன் கட்டிய பெரிய கோயில்களுள் 29 வதாக இடம் பெறுகிறது, இடிகரை ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம்.
இந்த ஸ்ரீவில்லீஸ்வரர் கோயிலைக் கட்டுவதற்கு முன்பாக இருகூர் நகரைக் கடந்து இருண்ட வனத்தில் இடம் தேடி வந்து கொண்டிருந்தான் கரிகாலன். அப்போது அந்தப் பகுதியை ஆண்ட சேர மன்னனிடம் பலி கேட்டாள் காட்டின் காவல் தெய்வமான வில்லிதுர்க்கை பத்ரகாளி. சேர மன்னன் இந்த விவரத்தை சோழனிடம் தெரிவித்தான். அப்போது, காட்டை அழித்து ஊராக்கிய பின் துர்க்கைக்குக் கோயில் கட்டுவதாகச் சொன்னான் கரிகாலன். பின்னர் காட்டை அழிக்கும்போது வில்லீஸ்வரர் எனும் சிவலிங்கம் அவனுக்குக் கிடைத்தது. எனவே, அதை வைத்தே இடிகரையில் ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினான் என்கிறது வரலாறு. அதன் பின் இடிகரை நகர் முன்னேற்றத்துக்கு வேண்டியன எல்லாமும் செய்தான் மன்னன் கரிகாலன். உழவுப் பணிக்கும் வாணிகத்துக்கும் நகரில் அதிகாரம் செலுத்தவும், ஊர் வரவு- செலவைக் கவனிக்கவும், கோயிலில் ஊழியம் செய்யவும், கோயிலில் நாட்டியமாடவும் தகுந்த நபர்களைத் தேர்வு செய்து நியமித்தான். அதாவது வனவாசத்தின்போது ஸ்ரீராமபிரான் இங்கு வந்து இந்த ஈசனிடமிருந்து வில்லை வாங்கிச் சென்றாராம். அதனால், வில்லீஸ்வரர் ஆனாராம். இதற்கு ஆதாரமாக இடிகரைக்கு அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவிந்தநாயக்கன் பாளையத்தில் கோதண்டராமர் கோயில் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
உள்ளூரில் உள்ள ஆன்மிக அன்பர்களின் உதவியால் தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆலய விமானங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருக்கின்றன. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வரை இங்குள்ள ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு ஒவ்வொரு மாதமும் நடக்கும் கிருத்திகை விழாவுக்கு மக்கள் கூட்டமாக வருவார்களாம். ஆனால், இன்று அந்த நிலை இல்லை. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் வில்லீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான உற்சவர் விக்கிரகங்கள் ஸ்ரீசந்திரசேகர் உமாதேவி, நடராஜர்-சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் சுப்ர மணியர், விநாயகர், பிட்சாண்ட வர் மற்றும் சுந்தரர், அப்பர் ஆகியோர் வேறோர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவாம். விசேஷ காலத்தில் மட்டும் அந்த விக்கிரகங்கள் இந்தக் கோயிலுக்கு எடுத்து வரப்படும். ஆலயத்துக்கான வாகன மண்டபம் இடப்பக்கத்தில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு : வில்வ மரங்கள் நிறைந்த இந்த இடத்தில அமைத்த கோயில் இது.சிவனுக்கு வில்லீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலுக்குக் கோபுரம் என்று எதுவும் இல்லை. கொடிமரம் இல்லை. அதற்கு பதிலாக கோயிலுக்குள் தீபஸ்தம்பம் கம்பீரமாக நிற்கிறது. தீபஸ்தம்பத்தின் நாற்புறமும் முருகன், வேல், விநாயகர், பசுபதீஸ்வரர் உருவ அமைப்புகள் தெளிவாகவும் அழகாகவும் தெரிகின்றன. பலி பீடம், நந்தி ஆகியவற்றைத் தாண்டியதும் வில்லீஸ்வரர் ஆலயம். இங்கு வில்லீஸ்வரர், பாலசுப்ரமணியர் மற்றும் அம்பாள் வேதநாயகிக்குத் தனித் தனிக் கோயில்கள் அடுத்தடுத்து வரிசையாகக் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம். கருவறையில் மூலவர் ஸ்ரீவில்லீஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். கருவறையின் வடபுறச் சுவரில் வெளியே ஸ்ரீதட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். கருவறையின் தென்புறச் சுவருக்கும் பாலசுப்ரமணியர் ஆலயத்துக்கும் இடையே தனக்கு உண்டான இடத்தில் தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். மகா மண்டபத்தில் தென்புறமாக வடக்கு நோக்கி அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரும், கிழக்கு நோக்கி மூல விநாயகரும் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தில் கனகசபை உள்ளது. மகா மண்டபத்தின் வடபுறச் சுவரில் விஷ்ணுதுர்க்கை காட்சி தருகிறாள். மகா மண்டபத்தை ஒட்டி நவக்கிரக சந்நிதியும் உண்டு. மகா மண்டபத்தின் முன் பிரதோஷ நந்தி, மூலவரை நோக்கி அமர்ந்துள்ளார். வில்லீஸ்வரர் ஆலயத்துக் குத் தென்கிழக்கே மேற்கு நோக்கி சூரிய பகவான் வீற்றிருக்கிறார். வெளியே தனிச் சந்நிதியில் கால பைரவர் கோயில் கொண்டுள்ளார்.
ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயத்தை அடுத்து அதே வரிசையில் ஸ்ரீபாலசுப்ரமணியருக்குத் தனி ஆலயம். இங்கு விமானம் உண்டு. மகா மண்டபத்தின் முன் மயில் வாகனம் இருக்கிறது. இரண்டு கைகள். கையில் வேலுடன் எழிலாகக் காட்சி தருகிறார். ஸ்ரீபாலசுப்ரமணியரின் ஆலயம் வெகுவாக இடிபாடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது. வேதநாயகி அம்மன் கோயில். ஸ்ரீபாலசுப்ரமணியரை அடுத்து அமைந்துள்ளது. விமானம் உண்டு. நான்கு கைகள். இரண்டு கைகளில் தாமரை மலர்கள். மற்ற இரண்டு கைகள் வர அபய முத்திரைகள் காட்டிய வண்ணம் உள்ளன. இந்த ஆலயத்தில் வில்லீஸ்வரர் சந்நிதிக்குக் கீழே ஒரு சுரங்கம் உண்டு. போர் மற்றும் இதர அசந்தர்ப்பங்களின்போது இந்தச் சுரங்கத்தின் வழியே சென்று அருகில் இருக்கும் மற்ற இரு சிவாலயங்களைத் தரிசிப்பது கரிகாற்சோழனின் வழக்கம். மற்ற இரண்டு தலங்கள் இங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பாளையம் காலகாலேஸ்வரர், 8 கி.மீ. தொலைவில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர். இந்த மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதுதான்.
மாதக் கார்த்திகை, மாத பிரதோஷம், மாத சதுர்த்தி, பைரவருக்கான அஷ்டமி பூஜை, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபத் திருவிழா போன்றவை உட்பட பல வைபவங்கள் இங்கு சிறப்பாக நடக்கும்.
காலை 8.00 மணிமுதல் பகல் 10.00 மணிவரை, மாலை 6.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை