மருதூர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை புஜங்கனூர் வழித்தடத்தில், மருதூர் மாகாளியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தூரம் நடந்தால் இக்கோயிலை அடையலாம்.
இறைவன் : பசுபதீஸ்வரர்
தல விருட்சம் : வன்னி
தல சிறப்புகள் : கிழக்கு நோக்கிய ஆலயத்தில் நுழைந்ததும் தீபஸ்தம்பத்தில் உள்ள விநாயகர், பசுவுடன் கூடிய சிவலிங்கம், சூலாயுதமாக விளங்கும் சக்தி, வீரபத்திரர் ஆகியோரை தரிசிக்கலாம். உள்ளே நந்தியெம்பெருமான் கம்பீரமாக அருள்பாலிக்கும் அழகிய மண்டபம். இந்த சிவபெருமான் தனது வாகனமான நந்தியெம்பெருமானுக்கு முக்கியத்துவம் அளித்ததை பக்தர்கள் உணரும்விதமாக ஒவ்வொரு பிரதோஷ வழிபாடும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சனிப்பிரதோஷ நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க, அது மிகப்பெரிய விழாவாகத் திகழ்கிறது.
தல வரலாறு : 700 ஆண்டுகளுக்கு முன் மருத மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘மருதபுரி பட்டணம்’ என அழைக்கப்பட்ட இவ்வூரில், அப்போது கொங்கு நாட்டை ஆட்சி புரிந்துவந்த, கொங்கு பாண்டியர்களில் ஒருவரான சடையவர்மன் சுந்தரபாண்டியன், சுயம்பு லிங்கத்திருமேனி உடையவர்க்கு அழகிய ஆலயம் எழுப்பி வழிபாடு செய்திருக்கிறான். அது விஸ்வேஸ்வர விநாயகர் ஆலயம்.
பின்னர், 400 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்திலிருந்த நந்தியெம்பெருமானை இரவில் சில கயவர்கள் திருடிக்கொண்டு சற்று தூரம் சென்ற நேரத்தில் ‘அம்மா’ என்ற குரல் அசரீரியாய் ஒலித்துள்ளது. அதேகணம், கோயிலைச் சுற்றி வாழ்ந்த விவசாய குடும்பத்தினர் வளர்த்து வந்த பசுக்கள், கன்றுகள், காளைகள் எல்லாமும் அம்மா, அம்மா என தொடர்ந்து கத்தியவாறு, தாம் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிய்த்துக்கொண்டு ஓட முயன்றன. இது கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மக்கள் விழித்துக்கொண்டார்கள். தங்கள் கால்நடைகள் இப்படி ஒரு ஆக்ரோஷம் காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததை ஒருபோதும் பார்த்திராத அவர்கள் தத்தமது மாட்டுக் கொட்டிலுக்கு ஓடோடி வந்தனர். என்ன, ஏது என்று புரியாமல் குழம்பிய அவர்கள் யோசித்து, சிவபெருமானிடம் முறையிட இந்த ஆலயம் நோக்கி வந்தனர். ஆவினங்கள் கூக்குரலிட்டதையும், ஒரு கூட்டமாக கிராம மக்கள் ஆலயம் நோக்கி ஓடி வருவதையும் கண்ட திருடர்கள் தெய்வக் குற்றம் செய்துவிட்டதை உணர்ந்து, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, நந்தியெம்பெருமான் சிலையை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர்.
ஆலயத்துக்கு வந்த கிராமவாசிகள் நந்தியெம்பெருமான் சிலை களவு போனதை அறிந்துகொண்டனர். கயவர்கள் போட்டுச்சென்ற இடத்திலிருந்து சிலையை எடுத்து வந்து விடியற்காலைக்குள் ஆலயத்தில் அதனிடத்தில் வைத்தனர். பின்னர் ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி செயல்பட்டனர். ஒரு மண்டபம் எழுப்பி அதனுள் நந்தியெம்பெருமானை பிரதிஷ்டை செய்தனர். இத்தலத்து சிவபெருமான் தனது விடைத்தேவர் களவு போனதை பசுக்கள், கன்றுகள், காளைகள் மூலம் உணர்த்திய நிகழ்வினால் பக்தர்கள் மெய்சிலிர்த்து, அந்த மகிமையைப் போற்றும்வகையில் சிவபெருமானுக்கு பசுபதீஸ்வரர் என்ற புதிய திருநாமம் சூட்டி மகிழ்ந்தனர். மருதபுரி பட்டணம், தற்போது மருதூர் என மருவிவிட்டது.
பிரதோஷ தினத்தன்று மாலை 4 மணிக்கு மேல் நந்தியெம்பெருமானுக்கு பன்னீர், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் நந்தியெம்பெருமானையும், பசுபதீஸ்வரரையும் வணங்கும்போது மனதில் அமைதியும், வாழ்க்கையில் முன்னேற புதிய நம்பிக்கையும் தோன்றுவது ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக இருக்கிறது.
இத்தலம் வந்து தவறாமல் பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்டு நல்ல வரன்கள் அமைந்து திருமணம் முடித்த பெண்கள் ஏராளம். அதனாலேயே எண்ணற்ற பெண் பக்தர்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார் இந்த இறைவன். கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபத்தன்று கோயிலில் ருத்ர ஹோம பூஜையும், பசுபதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம், நடத்தப்பட்டு கலசம் வைத்து சிறப்பு அலங்காரங்கள், நந்தியெம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்வித்து தீபாராதனை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை ஏழு மணிக்கு கோயில் தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் பக்தர்களும் எண்ணற்ற தீபங்களை கோயிலில் ஏற்றி தங்கள் வாழ்வில் புத்தொளி பிறக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றனர். ருத்ராபிஷேக பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பில்லி, சூன்யம், செய்வினை கோளாறு களிலிருந்து விடுபடுவதாக ஐதீகம். மஹா சிவராத்திரி இரவு இறைவனும், விடைத்தேவரும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளில் ஜொலிக்கிறார்கள்.
ஆனித் திருமஞ்சனம் காலை ஆறு மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி மாலை ஏழு மணிவரை பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று மதியம் இத்தலத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள மாகாளியம்மன் ஆலயத்திற்கு சீர்வரிசை தட்டுகளுடன் கொட்டு மேளம் முழங்க சென்று தம்பதி பக்தர்கள் வழிபடுகின்றனர். அதன்பின் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கோ பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அடுத்து தம்பதியர் ஒற்றுமை ஓங்கிடவும், மாங்கல்ய பலம் வலுப்பெறவும், ‘ஓம்’ என எழுதபட்டு அதனுள் எண்ணற்ற கற்பூரம் ஏற்றி, அந்த அக்னிசாட்சியுடனும், இத்தல இறைவனின் அருளாசியுடனும் தம்பதியர் பூஜை மாலை மாற்றுதலுடன் விமரிசையாக நடைபெறுகிறது. இப்பூஜையில் கலந்துகொள்ளும் தம்பதியர் வாழ்வில் ஒற்றுமை உறுதிப்படுவதாகவும், புத்திர பாக்கியம் கை கூடுவதாகவும் பரவசத்துடன் கூறுகின்றனர்.
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். பிரதோஷ நாட்களில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை