பிருந்தாவனவேஸ்வரர், கோயம்புத்தூர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை நால்ரோடு சித்ரா நிறுத்தத்தில் இறங்கி, விமான நிலையம் செல்லும் பாதையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் பிருந்தாவன நகரில் ஆலயம் உள்ளது.
இறைவன் : பிருந்தாவனவேஸ்வரர்
இறைவி : சொர்ணாம்பிகை
தல மரம் : அரசமரம், வேம்பு மரம்
தல சிறப்புகள் : இறைவனும், இறைவியும் ஓரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர். அக்காலத்தில் இப்பகுதி துளசிச்செடிகளும், விதவிதமான மலர்ச்செடிகளும் நிறைந்த பிருந்தாவனமாக இருந்ததாம். அங்கு எழுந்தருளிய லிங்கமானதால் இறைவன் "பிருந்தாவனவேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் அமைப்பு : அமைதியும் அழகும் குடி கொண்ட அற்புதச் சூழலில் அமைந்துள்ளது, கோவை பிருந்தாவனவேஸ்வரர் ஆலயம். பிருந்தாவனவேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்கிறார். அருகே அருள்பாலிக்கும் அம்பாள் சொர்ணாம்பிகை, மிகுந்த ஆற்றல் படைத்தவள். பக்தர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித் தருகிறாள். மூலவர் பிருந்தாவனவேஸ்வரருக்கு முன்னே காணப்படும் நந்தி பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் காது கொடுத்துக் கேட்டுவிட்டு, ஈசனிடம் எடுத்துரைப்பதாக நம்பிக்கை, பக்தர்கள் நந்திதேவரின் காதில் தங்கள் வேண்டுதல்களைச் சொல்வதைக் காணமுடிகிறது. செல்வவிநாயகர், நவகிரகங்கள், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்திக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. அரச மரமும் வேம்பும் இணைந்து வளர்ந்திருக்க, அதன் கீழே மகாகணபதி காட்சிதருகிறார். திருமண வயதிலிருக்கும் பெண்கள் இந்த அரசு, வேம்பு மரங்களைச் சுற்றி வந்து, அதனடியே வீற்றிருக்கும் மகாகணபதியை பயபக்தியோடு வேண்டிச் செல்கிறார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதாகச் சொல்கிறார்கள்.
பெண்கள் இங்குள்ள இறைவன் இறைவிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்றும்; இங்கு அருளாட்சி செய்யும் ஈசனை வழிபட்டால் காலசர்ப்ப தோஷம், நவகிரக தோஷம் அகலும். வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி, பதவி உயர்வு குழந்தைப்பேறு வேண்டியும் நிறையப்பேர் இச்சன்னதிக்கு வந்து பிரார்த்திப்பதைக் காணலாம். பிரதோஷ வழிபாடு போலவே அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்குள்ள செல்வ கணபதி கல்வி அறிவையும், ஞாபக சக்தியையும் அருள்கிறார். துர்கைக்கு செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் எனப்படுகிறது. கணவன் மனைவியிடையே தோன்றும் கருத்துவேறுபாடு, இங்கே தனிச்சன்னதியில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசித்தால் தீரும் என்கின்றனர்.
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை