திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இறைவன் : பச்சோட்டு ஆவுடையார்
இறைவி : பச்சை நாயகி, பெரியநாயகி
தல தீர்த்தம் : நிகபுஷ்கரணி தீர்த்தம்
தல சிறப்புகள் : இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவஸ்தலம் இதுவாகும். 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தல வரலாறு : 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறாகும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் “குடம்’ அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது “சிறிய செம்பு’ அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். பார்வதி இங்கு தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும், கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விசயநகர அரசர் தேவராயர் காலத்துக் கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன. இக்கல்வெட்டுகள் நான்கிலும், இறைவன் பெயர் பச்சோட்டு ஆவுடையார் என்றே குறிக்கப்பட்டுள்ளது. உலாவுக்குத் தலைமையேற்று வந்திருந்த தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள், இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். மடவிளாகம் என்பது படை வீரர்கள் இருக்கும் இடத்தையும், கோயிலின் மடங்கள் இருக்கும் இடத்தையும் குறிக்கும். இங்கே, கோயில் மடம் இருந்துள்ளது. அந்த மடம் ஒரு பாசுபத மடமாகும். பாசுபதம், சைவத்தின் ஒரு நெறி.
பாசுபத நெறியில், பிரம்மனின் தலையைக் கொய்த சிவன், தன் கையில் பிரமனின் தலையைக் கையில் ஏந்தியவாறு இருப்பதால் இப்பெயர் பெற்றான். இலகுலீச பாசுபதத்திலிருந்து கிளைத்தவையே காளாமுகமும், காபாலிகமும். இவையும் பாசுபதம் என்னும் பெயரால் அறியப்படுகின்றன. உருத்திரன் என்னும் சுடலைச்சிவனுடன் தொடர்புடையவை. ஆருத்ராஎன்பது ஒரு நாள்மீனைக் குறிப்பது; பச்சை, ஈரம் என்னும் பொருளுடையது. கொய்த நிலையில், பிரமனின் மண்டை ஓடு பச்சையாகவும், ஈரமாகவும் இருப்பதன் அடிப்படையில், ”ஆருத்ரா” என்னும் அடைமொழியைப் பெற்ற ”கபாலம்” , ஆருத்ர கபாலம் ஆனது. ஆருத்ர கபாலத்தை ஏந்திய சிவன், ஆருத்ரகபாலீசுவரன் என்னும் பெயர் பெற்றது பொருத்தமே. வடமொழியாளர்கள் ஆருத்ரகபாலீசுவரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் எனில், அழகுத் தமிழில் ”பச்சோட்டு ஆவுடையார்” என்றும் “பச்சோட்டு ஆளுடையார்” என்றும் இறைவன் அழைக்கப்பெறுகிறான். கல்வெட்டுகளில் இப்பெயர்களே காணப்படுகின்றன.
கோவில் அமைப்பு : பிரகாரத்தில் கன்னிமூலகணபதி, முருகன், சபாநாயகர் மண்டபம், தான்தோன்றீஸ்வரர் என்ற சுயம்புலிங்கத்திற்கு சன்னதிகள் உள்ளன. பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் “பச்சோட்டு ஆவுடையார்’ என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் “பச்சோட்டு ஆளுடையார்’ என காணப்படுகிறது. கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. “நிகபுஷ்கரணி’ என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. கொடிமரம் வணங்கி, வாத்திய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் “ஆருத்ரா கபாலீஸ்வரர்’ என்ற மற்றொரு சுயம்பு மூர்த்தியை தரிசனம் செய்யலாம். ஸ்ரீதேவி பூதேவி சமேத ரகுபதி நாராயணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள்.