கத்தாங்கண்ணி, நல்மணீஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி அருகில் காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழர்கள் நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு இப்பகுதியில் தானம் வழங்கியதால் இவ்வூரின் பெயர் கற்றாங்காணி என அழைக்கப்பட்டது.
இறைவன் : நல்மணீஸ்வரர், சவுந்தர சுவாமி
இறைவி : சவுந்தர வள்ளி நாயகி
தல விருட்சம் : பலா மரம், வில்வ மரம், ருத்ராட்ச மரம்
தல சிறப்புகள் : தினமும் காலை 6 மணியில் இருந்து 6.30 மணிவரை ஸ்ரீ நல்மணீஸ்வரர் சுவாமியின் திருமேனியில் சூரிய ஒளி படுவது மேலும் சிறப்பாகும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான நகுலன் இழந்த ராஜ்யத்தையும் பதவியையும் அடைய வேண்டி பூஜித்த சிறப்புவாய்ந்த திருத்தலம். இழந்த செல்வங்களையும், பதவிகளையும் மீட்டு தரும் இறைவனுக்கு பிரதோஷ நன்னாளில் அபிஷேகம் செய்து ஸ்ரீ ருத்ரமந்திரம் ஜெபம் செய்து வழிபட்டால் வேண்டியதை அருள்புரிவார் என்று உணர்ந்த நகுலன் அளவற்ற பக்தியுடன் மானசீகமாக பூஜை செய்தான். நகுலனின் தீவிர பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் மகத்தான ஒளியுடன் லிங்கத்திருமேனியாக காட்சியளித்து அருள்பாலித்தார்.
கோவில் அமைப்பு : இங்கு மூன்று சிவலிங்கங்கள் உள்ளன. இங்கே வீற்றிருக்கும் மஹா கணபதி தும்பிக்கையில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார். ஆகவே இங்கு சதுர்த்தி நாளில் மோதகம் படைத்து பூஜை செய்தால் காரிய தடைகள் நீங்கி எண்ணிய காரியங்கள் கைகூடி வரும். இங்கு ஸ்ரீ பாலதண்டபாணி வலது கையில் தண்டாயுதமும் இடது கையில் சேவலையும் பிடித்துக்கொண்டு தலையில் உச்சிக்குடுமியுடன் காட்சியளிக்கிறார் ஆகவே இங்கு கிருத்திகை விசாகம் சஷ்டி வரும் நாளில் சிவப்பு அரளி மாலை சாற்றி தேனும் தினைமாவும் படைத்து வழிபட்டால் ஆத்ம ஞானம் காரிய வெற்றி கிடைக்கும். இதில் பலா மரத்தை வாஸ்து நாளில் வணங்கி வழிபாடு செய்தால் வீடு வேண்டுவோருக்கு நல்ல வீடு மனை அமையும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணத்திற்கு முகூர்த்தக்கால் அமைத்தால் அவர்களின் திருமணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தல வரலாறு : இக்கோவில் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, பல வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக கல்வெட்டுகள் தெரியப்படுத்துகிறது. துரியோதனன் விதித்த நிபந்தனைப்படி 13 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, மேலும் ஒருவருட காலம் யாருக்கும் தெரியாமல் அஞ்ஞான வாசம் இருக்கவேண்டி இருந்தது. அஞ்ஞான வாசத்தை உத்திர பாரதத்தில் வடஇந்தியா கழித்தால் துரியோதனன் கண்டுபிடித்துவிடுவான் என்று அறிந்த பஞ்சபாண்டவர்கள் தங்கள் ஒருவருட அஞ்ஞான வாசத்துக்கு தென் பாரதத்தை தேர்ந்தெடுத்தனர். இந்த ரகசியம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஒருவருக்குமட்டுமே தெரியும். துன்பங்கள் கூட தர்மத்தை நாம் அறிந்துகொள்ள அளிக்கும் நல்ல வாய்ப்பு என்று, தங்கள் சோதனைகளை எடுத்துக்கொண்ட பஞ்சபாண்டவர்கள்.அந்த ஒருவருட மறைவு வாழ்க்கையை புண்ணிய காரியங்கள் செய்ய கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டனர். ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் என்று அனைத்து பகுதிகளிலும் தீர்த்த தல யாத்திரை மேற்கொண்டனர்.ஒவ்வொரு பகுதியாக தங்கி வனவாசம் செய்துகொண்டிருந்த பஞ்சபாண்டவர்கள் விராடபுரம் இன்றைய தாராபுரம் பகுதிக்கு வந்தனர். இங்கு சிலகாலம் தங்கியிருந்து சுற்றுப்பகுதியில் உள்ள பல கோவில்களுக்கு திருப்பணி செய்தும், வழிபட்டும் வந்தனர். அதை தொடர்ந்து நீர்வளமும் நிலவளமும் நிறைந்த கற்றாழன் காணி இன்றைய கத்தாங்கண்ணி என்ற ஊருக்கு வந்தனர். தெய்வீகமும் இயற்கை அழகும் நிறைந்த சூழலில் நன்மனீஸ்வரர் சன்னதியை கண்டதும் தவம் செய்ய ஏற்ற இடம் என்று சில காலம் தங்க முடிவு செய்தனர்.
ஆரம்பத்தில் கொங்குசோழர் காலத்தில் கி.பி 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் வீரசோழசதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட இவ்வூர். கி.பி. 14ம் நூற்றாண்டில் போசாள மன்னர்கள் காலத்தில் வீரசோழ பிரம்மா தேயமான கற்றான் காணியான வீரசோழ சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்டது. பின்னர் கி.பி. 15ம் நூற்றாண்டில் கற்றான் காணி என்று மட்டும் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தற்போது கத்தங்கண்ணி என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் வீரசோழ வளநாட்டில் இருந்த இவ்வூர், பின்னர் 14ம் நூற்றாண்டில் நறையனூர் நாட்டு வீரகேரள வளநாட்டில் இருந்ததாக குறிக்கப்பெறுகிறது.
தற்போது நல்மணீஸ்வரர் என்று அழைக்கப்படும் இக்கோவில் ஆரம்பத்தில் நன்மணீஸ்வரர் என்றும், பின்னர் நின்மணீசுவரர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றது. இக்கோவிலின் கருவறை வாயிலில் இடது வலது நிலைகளில் உள்ள கல்வெட்டுகள். கொங்கு சோழர் உத்தம சோழன் வீர நாராயணன். தன் இரண்டாம் ஆட்சியாண்டில் கி.பி.1137 சிவப்ராம்மணார் ஒருவருக்கு அவிப்பலி,அர்ச்சனை,மானபோகம், பரிகல பத்ரசேஷம், கிராம மரியாதை இவைகளை, இவரும் இவர்வழியினரும் பெறலாம் என்றும், இவைகளை விற்கவும், ஒற்றி வைக்கவும், தானமளிக்கவும் உரிமையுடையது என்று உரிமையளித்ததாக தெரிவிக்கிறது. கொங்கு சோழர் குலோத்துங்கன் கி.பி.1158ல் பத்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு நின்மணீஸ்வரர் கோவிலில் அவிநாசி வீரப்பெருமாள். வீரபாணம் பெருமாள் ஆகியோர் திருமுகத்தின்படி அளித்த 15 கழஞ்சு பொன்னால் சிவபிராமிணர் இருவர் நாள்தோறும் அம்மனுக்கு நாழி அரிசியால் திரு அமுது படைக்கவும் ஐந்து விளக்குகள் எரிக்கவும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கிறது. கொங்கு சோழர் வீரராஜேந்திரன் கி.பி.1221ல் 14வது ஆட்சியாண்டில் குறுப்புநாட்டுத் தென்பகுதிக்கு வீரசோழ வளநாடு என்று பெயர். கிரகணம் ஏற்பட்ட போது அதனால் வரும் தீமைகளை தவிர்க்க வரி ஏதும் இல்லாத ஆறு மா நிலத்தை வீரசோழ சதுர்வேதி மங்கலமாகிய கத்தாங்கண்ணிக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
போசாள மன்னன் மூன்றாம் வீரவள்ளாளதேவர் காலத்திய இரு கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. ஒன்று உடையபிராட்டிச் சதுர்வேதி மங்கலத்து விசுவாமித்தர கோத்திர திருநாரணபுரத்துப் பிள்ளை ஜெனநாத பிரமாதராயன், விளக்கு வைத்தமையை குறிக்கிறது. மற்றொரு கல்வெட்டு பிரமதேயமான கற்றாயான்காணி வீரசோழ சதுர்வேதி மங்கலத்துப் புல்லூர் பாரத்வாஜி அறியபொருள் விண்டுவரப் பெருமாளான விக்கிரபாண்டியப் பிராமணராயர் ஆளாவர் மகன் சிங்கப்பெருமான், அல்லாளனாதன், ஆகியோரிடம் இக்கோவில் சிவபிராமணர் மூவர் 50 பணம் மூலப்பொருளாக பெற்று மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, பெரிய திருமஞ்சனம், ஆடி அபனம் ஆகியவை நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கிறது.
மைசூர் சீமையின் தெற்கு பகுதியில் உள்ள உம்பத்தூர் என்ற ஊரை தலைமை இடமாகக்கொண்ட விஜய நகர பேரரசின் பிரதிநிதிகள் இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர். விஜயநகர பேரரசின் பலம் குன்றியிருந்த காலத்தில் இவர்கள் தன்னாட்சி பெற்று தம் பெயராலேயே உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டும் கல்வெட்டுக்களை பொறித்துக்கொண்டும் ஆட்சி செய்யட்டத்தொடங்கினர் இவர்களுள் வீரநஞ்சராயர் காலத்தில் கி.பி.1518 பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று திரிபுவனத்து இராசாக்கள் தம்பிரான் பராக்கிரம பாண்டி தேவர்மகன் இரங்கூத்தப்பெருமாள் கற்றாயான் காணியில் கைக்கோளாறுக்குக் கொடுத்த சில உரிமைகள் பற்றி கூறுகிறது.இவர்களது தெருவில் வசிக்கும் தட்டார், கணக்கர் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர். இக்கல்வெட்டு குறிக்கும் நஞ்சண்ராயர் அரிக்கரராயர் குமாரன் என்று கூறப்படுகிறார். நஞ்சண்ராயணை கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்த உம்மத்தூர் தலைவர்களில் ஒருவர் என்று கோவை கிழவர் இராமச்சந்திரஞ்செட்டியார் கூறியுள்ளார் இவ்வாறு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
காலை 6.00 முதல் பகல் 10.00 மணி, மாலை 4.00 முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை