விடயபுரம், மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் விடயபுரம் உள்ளது.
இறைவன் : மீனாட்சி சுந்தரேஸ்வரர்
இறைவி : மீனாட்சி தேவி
தல சிறப்புகள் : கம்பீரமாக பெரிய திருமேனியராக மூலவர் சுந்தரேஸ்வரர். ஆவுடையார் முதல் லிங்கம் வரை 6 அடி உயரத்திலும், அம்மன் 5 அடி உயரத்திலும் அருள் பாலிக்கிறார்கள். கற்பூர தீபம் பாணத்தில் பிரதிபலிக்கிறது.
தல வரலாறு : சோழமன்னர்கள் காலத்தில் இக்கோயில் ஏழு பிரகாரம் கொண்டதாக இருந்துள்ளது. காலப்போக்கில் சிதிலமடைந்தது. இப்பகுதியினர் சில பகுதிகளை விடுத்து 1916 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. 1941 ஆம் ஆண்டு காஞ்சிபெரியவர் நடை பயணமாக வந்து மூன்று நாள் தங்கி சிவனை வணங்கியுள்ளார். ஞானமார்க்கத்திற்கு சிறப்பானது என காஞ்சி முனிவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள கல்யாணமகாதேவி தலத்தின் கல்யாண மீனாட்சியின் ஆதிமூலத்தோற்றம் விடயபுரம். இங்கு மீனாட்சியை தரிசித்து, கல்யாணமகாதேவி சிவதலத்தில் கல்யாண மீனாட்சியை வழிபடுவது தொன்று தொட்டு வரும் ஐதீகமாகும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி தேவி, சர்வ மீனாம்பிகை தேவியர்க்கும் மூத்த அம்பிகையாய்ச் சதுர்கோடி யுகங்களிலும் துலங்கி அருள்பாலித்துவருகிறார். ராதை, பார்வதி, திருமகள், சரஸ்வதி, சாவித்ரி ஆகிய பஞ்சமாதேவி வழிபாடுமுற்காலத்தில் இருந்துள்ளது. நதிக்கரை தலமான இப்பகுதியில் கிருஷ்ண பரமாத்மா ராதையுடன் தோன்றி அருள் வழங்கிய இடம் அருகில் உள்ள ராதா நல்லூர். .
இவ்வூரில் பல மகான்கள் வாழ்துள்ளனர். அவர்களில் விடயபுரம் சட்டாம்பிள்ளை சுவாமிகள் சிறப்பானவர். 1880 ஆம் ஆண்டு திரு சின்னசாமி அகமுடையார் என்பரின் மகனாகப் பிறந்தவர்தான் விடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட சட்டாம் பிள்ளை சுவாமிகள். இராமசாமி என்ற திருப் பெயர் சூட்டப்பட்டவர்
ஓர் பண்ணையில் பணிகள் செய்து வந்தார், பண்ணையார் அவருடைய வேலைத் திறமையை மெச்சி அவரிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் தந்தார். ஒரு நாள் அவருடைய கனவில் மாரியம்மன் தோன்றினாள். தனக்கு ஒரு ஆலயம் அமைத்து அதற்கு பக்கத்தில் குளமும் தோண்டி தன்னை ஆராதிக்கும்படிக் கட்டளை இட்டாள். ஆலயம் அமைக்கப் பணத்திற்கு எங்கே போவது. நேரடியாக பண்ணையாரிடம் சென்றார். தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினார். ஒரு வார்த்தைக் கூட மறுப்புக் கூறாமல் பண்ணையார் சட்டாம் பிள்ளைக்கு அந்த ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய ஆலயம் எழுந்தது. கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது.
மாரியம்மன் அன்னை அவருக்கு பலமுறை கனவில் வந்தாள். கட்டளை பிறப்பிக்கத் துவங்கினாள். ஆலயத்திற்கு பெரும் திரளான மக்கள் வர துவங்கினர். பூஜைகள் தொடர்ந்து நடந்தன. கோவில் மெல்ல மெல்ல புகழ் பெறத் துவங்கியது. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களுக்கு அன்னையின் பிரசாதம் என்ற பெயரில் கஞ்சி ஊற்றப்பட்டது. அங்கு வந்த மக்களுடைய மனதில் சட்டாம் பிள்ளை ஒரு அவதாரப் புருடராகத் தோன்றவே தமது குறைகளை அவரிடம் வரத் துவங்கினர். வந்தவர்களிடம் 'ஆயி உங்களை பார்த்துக் கொள்வாள் கவலைப்பட வேண்டாம்" என ஆறுதல் கூறி அனுப்புவார். வீபுதி தருவார். வியாதிகள் குணமாகத் துவங்கின. பாம்பு மற்றும் தேள்கடி போன்றவை நிமிடத்தில் குணமாயிற்று. பன்னிரண்டு வருடமாக குளத்து நீரை மட்டுமே பருகி கடுமையான தவத்தில்இருந்தார் சுவாமிகள் , மந்திரவாதிகளின் மந்திர கட்டுக்களை உடைந்து மக்களை காப்பாற்றினார். இவரது சமாதி கோயில் அருகிலேயே உள்ளது. இப்படிப்பட்ட மகான் 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமாதி அடைந்தார். இன்றைக்கும் விடயபுரம் சென்று அவருடைய சமாதியில் பிரார்த்தனை செய்யும் பக்தர்களைக் காத்தருளி வருகின்றார்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய திருக்கோயில் முகப்பு கோபுரமில்லை சுதை வாயிலாக அமைந்துள்ளது, அதில் அர்த்தநாரீஸ்வரர் நின்றகோலம் அற்புதமாக உள்ளது. கோபுர வாயிற்பகுதியில் ஒரு புறம் விநாயகர், மறுபுறம் முருகன் மாடங்களில் உள்ளனர்.கோயில் கருவறை முகப்பு மண்டபம் நந்தி மண்டபம் என அனைத்தும் கருங்கல் திருப்பணிகள், முகப்பில் இறைவனின் எதிரில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. வலது பக்கம் கழுத்தை சாய்த்தபடி நந்தி அமைந்துள்ளது சிறப்பு அதனை கடந்ததும் அடுத்துள்ளது பெரிய அளவிலான முகப்பு மண்டபம். அதில் இறைவனின் வலதுபுற சன்னதியில் வலம்புரி விநாயகனின் அழகிய வடிவம், மறுபுற சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத முருகன், முருகன் என்றாலே அழகு அதிலும் இந்த முருகன் அதியுன்னத கலைப்படைப்பு. கிருஷ்ணர் தோன்றிய நந்தன தமிழ் வருடத்தில் நவராத்திரிக்கான விசேஷத்தலமாக விடயபுரம் குறிப்பிடப்பட்டு சிவ,விஷ்ணு பூமி என சிறப்பிடம் பெறுகிறது. இங்கு ஒன்பது நாட்கள் தங்கி நவராத்திரிப் பூஜைகள் செய்வதால்,நம்மையும், மனது சந்ததிகளையும் நன்கு தழைக்க வைக்கும் சிறப்பிற்குரியது. கருவறை கோட்டத்தில் விநாயகர், மற்றும் தென்முகன் மட்டும் உள்ளனர். வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளனர். மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் இரு லிங்கங்கள், அம்பிகை ஆகியன உள்ளன.
காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், மயிலாடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை