ராஜபதி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை அருகில் மணத்தி என்ற கிராமத்திலிருந்து வடக்கில் 1 கி.மீ தொலைவில் ராஜபதி உள்ளது. தாமிரபரணி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த கோயில் அழிந்துவிட்டது. குரும்பூரிலிருந்து சிற்றுருந்து வசதி உள்ளது
இறைவன் : ஸ்ரீகைலாசநாதர்
இறைவி : ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
தல தீர்த்தம் : பாலாழி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. சிவாலயம் கேது தலமாக போற்றப்படுகிறது. கோவில் இருந்த இடம் முழுதும் இயற்கைச் சீற்றத்தால் அழிந்து விட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை , சிவன் இருந்த இடத்தில் ஒரு கல் மட்டுமே அடையாளமாக இருந்தது. சுற்றிலும் வறண்ட காடு தான். வெட்ட வெளியில் வானமே கூரையாகவும் , பூமியே கோவிலாகக் கொண்டும் அக்கல் மட்டுமே இருந்தது. மக்கள் சென்று அதனையே வழிபட்டு வந்தனர். இக்கோவிலில் முன்பிருந்த நந்தி, தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது. இவர்க்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கால்நடைகளுக்கு நோய் வராது என்பர். அறுபத்துமூவர் உட்பட பல சுற்றுத் தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.
இத்தலத்தின் அருகே ராஜமாளிகை ஒன்று உள்ளதால் இத்தலம் ராஜபதி என பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. மேலும் மதுரையை ஆண்ட சந்திரகுலபாண்டிய மன்னனால் இத்தலம் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இக்கோயில் தென்திருப்பேரை கைலாச நாதர் கோயிலைப் போன்று உள்ளது மேலும் ராஜபதியில் உள்ள ஒற்றைக்கல் தென்திருப்பேரை கோயில் தேவதான நிலத்தின் எல்லைக்கல் என்பது இவர்களது கருத்து. ஆனாலும், ராஜபதியில் உள்ள எல்லைக்கல்லையே இன்றும் சிவலிங்கமாக கருதி வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலின் 13 ஆம் ஆண்டு கல்வெட்டு தருவழுதி வளநாட்டுக் கற்குறிச்சியான மணத்தியில் நாயணார் இடையாற்று ஈசுவரமுடைய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு இலிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவார தெய்வங்கள் யாரும் இல்லை. இங்குள்ள இலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. இலிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். பக்தர்கள் இந்த இலிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த சிவனுக்கு பலவர்ண ஆடை சாத்தி, கொள்ளு நைவேத்யம் படைத்து வழிபடலாம்.
சோதனைகள் எத்தனை வந்தாலும், தர்மத்தின் பக்கமே இருப்பவர்களுக்குக் கண்கண்ட தெய்வம் கேது பகவான். இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்ற நீதியை புகட்டுபவன் கேது பகவான். விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடனுறை முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர். திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர். இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத்தடை போன்றவற்றுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது. இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும். இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது. இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும். நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகில் விமான நிலையம் : தூத்துக்குடி, மதுரை
அருகில் உள்ள ரயில் நிலையம் : குரும்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை