உய்யக்கொண்டான், திருமலை ஆளுடையார்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் திருமலையில் கோயில் உள்ளது. திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் திருமலைக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன.
இறைவன் : திருமலை ஆளுடையார்
இறைவி : மைவிழியாள், பாலாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : ஞானவாவி
தல சிறப்புகள் : கருவறையில் இறைவன் ஆளுடையார், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருடைய திருமேனி எட்டரை அடி உயரத்தில், பிரம்மாண்டமாக, அழகிய திருக்கோலத்துடன் அமைந்திருப்பதும் மற்றும் இங்கே அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் இருப்பது சிறப்பாகும்.
கோவில் அமைப்பு : இக்கோவில் மலையை செதுக்கி உயரமான மலை மேல் அமைக்கப்பட்டுள்ளது ஆலயம். கிழக்கு நோக்கி இருக்கும் சந்நிதியில் அம்பாளுக்கு அஞ்சனாக்ஷி என்றும் தூய தமிழில் மைவிழியாள் என்றும் அழைக்கப்படுகிறாள். கண்களுக்கு மை தீட்டிய அந்தக் கருணைக் கடல், தமது ஒரு கண்ணால் பக்தர்களின் தீமைகளை அழித்து, மறு கண்ணால் நன்மைகளைப் பொழிகிறாள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சந்நிதியில் பாலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கிறாள். தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் பெருமாளும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வர சன்னதி, ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதிகளும் உள்ளன. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம், நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும் உள்ளது.
திருமலை என்றால் போற்றுதலுக்குரிய, வணக்கத்துக்குரிய மலை என்று பொருள். வடக்கே வேங்கடம் எனப்படும் திருப்பதியில் வேங்கடசப் பெருமாளுக்கு ஒரு திருமலை என்றால், தெற்கே சிவபெருமானுக்கு திருச்சியில் இந்தத் திருமலை. 50 அடி உயரமுள்ள சிறிய குன்று தான். உய்யக்கொண்டான் கால்வாய் கரையில் இந்தக் குன்று உள்ளது. குன்றின் மேல் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு ஏறிச் செல்ல படிகள் உள்ளன. 10 படிகள் ஏறியதுமே விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு 100 படிகளுக்கு மேல் கடந்து சென்றால் வலுவான கோட்டையாக உய்யக்கொண்டான் திருமலை கோயில் திகழ்கிறது. கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றி சுற்றுச்சுவரும், அதற்கு வெளியே ஆறு அடி அகலம் உள்ள வலிமையான மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் மேற்கு நோக்கி சிவபெருமான் சன்னதி உள்ளது.
சிவபெருமான் சன்னதி உள் பிரகாரத்தில் உள்ள கோஷ்டத்தில், கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் அல்லது மகாவிஷ்ணு இருப்பது வழக்கம். ஆனால் இங்கே வித்தியாசமாக பெண்ணுக்கு சரிபாதி தந்தவராய், அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். உய்யக்கொண்டான் ஆலயத்தின் சிறப்பம்சம், இங்கே அம்பாளுக்கு இரண்டு சன்னதிகள். கிழக்கு நோக்கி இருக்கும் சன்னதியில் அம்பாளுக்கு அஞ்சானாட்சி என்று திருப்பெயர். தூய தமிழில் மைவிழியாள் என்று பொருள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சன்னதியில் பாலாம்பிகா அருள்பாலிக்கிறார். உய்யக் கொண்டான் கோயிலை 1200ஆண்டுகளுக்கு முன்பு நந்திவர்ம பல்லவன் என்ற பல்லவ மன்னன் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கே கோயில் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ராமாயண காலத்தில் ராவணனின் படைத் தளபதியாக இருந்த கரன் என்ற அரக்கன், இந்தக் கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு வரங்களை பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டில் நந்திவர்ம மங்கலம், ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்றும் இறைவர் உய்யக்கொண்டநாதர் என்றும் குறிக்கப்படுகிறது. கி.பி 18ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின் போது இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், மைசூர்க்காரர்கள் மாறிமாறி தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக அறியப்படுகிறது.
தல வரலாறு : ராவணனின் தந்தையான விச்சிரவசுவுக்கும் சாகை என்பவளுக்கும் பிறந்த மூன்று புதல்வர்களுள் மூத்தவன் தான் கரன். இவனது சகோதரர்கள் தூஷணன், திரிசரன் என்பவர்கள். கரன், திரிசரனின் சேனாதிபதியாய் இருந்தான். கரன் தவம் செய்வதற்காக ஒரு சிவன் கோயிலைக் கட்டத் திட்டமிட்டான். திரிசரன் திருச்சியை அரசாண்ட போது, கரன் உய்யக்கொண்டான் திருமலையில் ஒரு சிவன் கோயிலைக் கட்டிமுடித்தான்.
மார்க்கண்டேய மகரிஷி 16 வயது நிறைவடையும் தருணத்தில் இங்கே வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. 16 வயது நிறைவடைந்ததும், தனது உயிரை எமன் வாங்கிவிடுவான் என்ற காரணத்தால், தன்னைக் காப்பாற்றும்படி உச்சிநாதரை மார்க்கண்டேயர் மனமுருக வேண்டியிருக்கிறார். உடனே மனமிரங்கிய அம்பாள் சிவபெருமானை கேட்டுக் கொள்ள, மார்க்கண்டேய மகரிஷிக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை இங்கு தான் சிவபெருமான் வழங்கினாராம். ஆகையால் இங்கு வந்து உச்சிநாதரை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. உய்யக்கொண்டான் திருமலையில் நாரதர், உபமன்யு போன்ற மகரிஷிகளும் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். கோயிலில் கொடிமரம் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு எமனை தடுப்பதற்காக கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற, சுவாமியின் பாதம் உள்ளது.
பிற்காலத்தில், மலைக்கோட்டையோடு அமைந்த உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலை கைப்பற்ற பிரஞ்சுப் படைகளும், பிரிட்டிஷ் படைகளும் மோதியுள்ளன. சிறிது காலம் பிரஞ்சுக்காரர் வசமிருந்த இந்தக் கோவிலைக் கைப்பற்ற பிரிட்டிஷ் படையினர், மேஜர் லாரன்ஸ் என்ற தளபதியின் தலைமையில் கடும் சண்டை புரிந்துள்ளனர். அப்போது பிரிட்டிஷாரின் பீரங்கிக் குண்டுகளை இந்தக் கோவில் மதில் சுவர்கள் தாங்கி நின்ற வடுக்களை, இப்போதும் காணலாம்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோத்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சிராப்பள்ளி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை