அம்பாசமுத்திரம், வீர மார்த்தாண்டேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ளது.
இறைவன் : வீரமார்த்தாண்டேஸ்வரர்
இறைவி : நித்யகல்யாணி
உற்சவர் : சோமாஸ்கந்தர்
தல தீர்த்தம் : ஹரிஹர தீர்த்தம்
தல வரலாறு : முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்கு தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவதென தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவன் மன்னனின் பெயரால், “வீரமார்த்தாண்டேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.
தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சிவனும், அம்பிகையும் “சிவசக்திசொரூபமாக” இருப்பதாக ஐதீகம். எனவே இருவரது சன்னதியையும் சேர்ந்து சுற்றி வரும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. கால பைரவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கடன் பிரச்சனை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பிரகாரத்தில் சூரியன், ஜூரதேவர், நால்வர், கன்னிவிநாயகர், பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் சந்திரனுக்கு சன்னதிகள் உள்ளது.
புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்க சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், இங்கு வேண்டிக்கொள்ள அவர்களது வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண விழா நடக்கிறது.
காலை 6.30 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை