திருவிடைமருதூர், ரிஷிபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ அம்மாசத்திரம் திருபுவனம் அடுத்து திருவிடைமருதூர் பெரிய மருத்துவமனை அருகில் உள்ளது. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில் தோன்றுவதற்கு முன்பே இந்த கோயில் தோன்றியதாக கூறப்படுகிறது.
இறைவன் : ரிஷிபுரீஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை
தல தீர்த்தம் : காகதீர்த்தம்
தல விருட்சம் : வில்வமரம்
தல சிறப்புகள் : நந்திதேவர் செவிகளில் இருந்து சிறு திரவப்பொருள் எப்பொழுதும் கசிந்து கொண்டு இருப்பது உலக அதிசயம். ரிஷிகளுக்கு அருள்புரிந்ததால் ரிஷிபுரீஸ்வரர் என்றும் அவர்களுக்கு ஞானத்தை அளித்ததால் ஞானாம்பிகை என்றும் சிறப்பு பெயர் வந்தது. பட்டினத்தார், பத்திரிகிரியார், வரகுண பாண்டியன், விக்கிரம சோழன் போன்றோர்கள் இவ்வாலயத்தை திருப்பணி செய்து பேறு பெற்ற தலம்.
தல வரலாறு : இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் மகாலிங்க பெருமாளின் தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலம் அகத்தியர், பரத்வாசர், காசிபர், கவுதமமுனிவர், கவுசிக முனிவர், உரோமச முனிவர் போன்றவர்கள் தவம் செய்து ஞானம் பெற்ற ஸ்தலம். இதனால் பரத்வாச கோத்திரம், காசிப கோத்திரம், கவுசிக கோத்திரத்தை சேர்ந்தவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு.
இத்தலம் மருதமரம் நிறைந்த மத்தியார்ச்சுனக் காடாகும். வடக்கே மல்லிகார்ச்சுனம் எனப்படும் ஸ்ரீசைலம் தெற்கே புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் இவற்றின் நடுவே உள்ளதால் இது மத்தியார்ச்சுனம் எனப்பட்டது.
பாண்டிய மன்னனான சித்ரகீர்த்தி, சுகுணா என்ற தம்பதிகளுக்கு குழந்தைபேறு இல்லாததால் இவ்வாலயத்துக்கு வந்து பங்குனி முதல் தேதி இக்குளத்தில் நீராடி ஞானாம்பிகை சமேத ரிஷிபுரீஸ்வரை வழிபட்டதால் அவர்களுக்கு மக்கட்பேறு உண்டானது என்பது வரலாறு. இங்குள்ள காவிரியின் படித்துறையில் விநாயகர் அமர்ந்துள்ளதால் இவர் படித்துறை விநாயகர் என அழைக்கப்படுகிறார். பங்குனி மாதம் முதல் தேதியன்று இங்குள்ள காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்பு.
கோவில் அமைப்பு : விநாயகர் மிகவும் அழகான ரூபத்துடன் காட்சி அளிக்கிறார். ரிஷப ராசிக்காரர்கள் குறிப்பாக 5 வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வெள்ளியன்றும் 4 தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நடைபெறும். எனவே இந்த விநாயகர் ரிஷபராசி விநாயகர் என அழைக்கப்படுகிறார். வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் மிக அழகாக காட்சி அளிக்கிறார். இவரை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட உடல் சம்பந்தமான வியாதிகள் போகும் என்கின்றனர். ரிஷிபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியுடன் மிகவும் அழகானத் தோற்றத்துடன் காணப்படுகிறார். திருவாதிரை, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் அந்தந்த நட்சத்திர தினத்தில் இவரை வழிபட்டால் எல்லா நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஞானாம்பிகை அம்மன் மிக மிக அழகாக, பார்த்தவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சிறிய உருவத்துடன் காட்சி அளிக்கிறாள். மக நட்சத்திரக்காரர்கள் மற்றும் சிம்மராசிக்காரர்கள் இந்த அம்மனை வழிபட நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. மிகவும் அரிதான மகாலட்சுமி, குபேரன் சன்னதி வடக்குதிசை நோக்கி அமைந்துள்ளது.
வடக்கு பார்த்த குபேரனை வழிபட கடன் தொல்லைகள் நீங்கும், வியாபார அபிவிருத்தி மற்றும் அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும். பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை திங்கள் கிழமைகளில் 4 நெய் தீபம் ஏற்றி வழிபட நினைத்த காரியம் நடக்கும். சிவபெருமான் திருக்கண்களிலிருந்து உண்டாகிய தீர்த்தம் கனகதீர்த்தம். மிகக் கொடிய காக்கை ஒன்று நீராடி மோட்சத்தை அடைந்தால் காக தீர்த்தம் என்று பெயர் பெற்றது. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடினால் விரைவில் குணமடைவதுடன், நமது முன் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தம் துளியொன்று தலையில் பட்டால் பதினாயிரம் வேள்வி செய்த பலன் உண்டாகும். கொடிய நோய்கள் அகலும். செல்வம் வந்து அடையும்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவிடைமருதூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை