வெட்டுடைய காளியம்மன் கோயில்
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி கிராமத்தில் இருந்து தெற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள அரியாகுறிச்சி என்ற இடத்தில் வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர் : வெட்டுடைய அய்யனார்
அம்மன் : வெட்டுடைய காளியம்மன்
பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோயிலில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். மேலும் காளி தன் வலது காலை ஊன்றி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். சூரிய பகவானின் சூரிய கதிர்கள் காலை வேளையில் அய்யனார் மீதும் மாலை வேளையில் அம்மன் மீதும் விழுகின்றன. வலது கரத்தில் தண்டம் வைத்துள்ளார். எதிரே யானை வாகனம் காணப்படுகிறது.
நீதிபதி அம்பிகை : அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.
தல சிறப்பு: முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய ஐயனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் ஐயனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் ஐயனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையார் காளி' என்றே பெயர் ஏற்பட்டது.
தல வரலாறு : சிவபெருமான் திருக்கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் பராசக்தி. உலகங்களுக்கெல்லாம் கண்கொடுக்கும் கண்கள் மூடப்பட்டதால் எல்லா உலகங்களும் இருண்டன. இந்தக் குற்றத்திற்காக நிலவுலகில் கருப்பு நிறத்தில் காளியாகத் தோன்றினாள் உமாதேவி. காளம் என்றாள் கருப்பு, காளி என்றால் கருப்பு நிறம் பெற்றவள். சண்டாசுரன் என்பவன் தேவர்களையும், மனிதர்களையும் துன்பப்படுத்தினான். பராசக்தியாலன்றி அவனுக்கு யாராலும் மரணமில்லை. எனவே தேவர்கள் காளியிடம் வேண்ட காளி சண்டாசுரனை வெற்றி கண்டாள். இச்சமயத்தில் தேவர்கள் தங்கிய இடம் தேவகோட்டை என்றும், தேவியை கண்ட இடம் கண்டதேவி என்றும், சண்டாசுரனின் தேர்க்கொடி முறிந்த இடம் கொடிக்குளம் என்றும், அவனை வெற்றி கண்ட இடம் வெற்றியூர் என்றும், தேவர்கள் பூ மழை பொழிந்த இடம் பூதகுடி என்றும் வழங்கப்பெற்றன. சண்டாசுரவதத்தின் பின் காளி திருக்கானப் பேர் என்னும் காளையார்கோயிலை அடைந்து காளீசரை வணங்கித் தவமிருந்து கரிய உருவம் நீங்கப் பெற்று உமாதேவியாக மாறினாள். காளையார் கோயில் செல்வதற்கு முன் அன்னை காளி வீற்றிருந்து அருள்புரிந்த திருத்தலமே அரியாகுறிச்சி எனப்படுகிறது.
கோவில் அமைப்பு : கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான். சோணை கருப்பசாமீ கோவிலுக்கு வெளியே சன்னதி கொண்டுஉள்ளார்.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
அருகில் உள்ள பேருந்து நிலையம் : காளையார்கோயில் 7 கி.மீ
அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் : சிவகங்கை 15 கி.மீ
அருகில் உள்ள விமானம் நிலையம்: மதுரை 85 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு