ஆறகழூர், காயநிர்மாலேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஆறகளூர் ஆத்தூர் வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : காயநிர்மாலேஸ்வரர், காமநாதீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தல தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
தல விருட்சம் : மகிழம்
தல சிறப்புகள் : இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் "ஆற்றூர்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் "ஆத்தூர்' என்று மருவியுள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு "அனந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
தல வரலாறு : சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர் , வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
கோவில் அமைப்பு : இத்தலவிநாயகர் மூலவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள ராஜகோபுரம் மூன்றுநிலைகளைக் கொண்டது. அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுவாமிக்கு வலது பின்புறத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில் ஐயப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்னே இருபுறமும் விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகர் தன் தம்பியான ஐயப்பனை தன் நிழல் வடிவிலும் காப்பதாக கூறப்படுவதால் இரண்டு விநாயகர் சன்னதி இருப்பதாக சொல்கிறார்கள். சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும். இந்த சீடர்கள் யாரென்பதை அறிய முடியவில்லை.
இத்தலத்திற்கு வெளியே "தலையாட்டி பிள்ளையார்' சன்னதி உள்ளது. மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்கினான். இவரே கோயிலுக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா என்று கேட்டான் மன்னன். அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
தமிழ்ப் புத்தாண்டு , ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி , தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம் , விநாயகர் சதுர்த்தி , மாசி மகம் ,கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை