கிழக்கு கோதாவரி, க்ஷீர ராம லிங்கேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாலக்கொல்லு, கடலோர ஆந்திர பகுதியில் அமைந்துள்ளது
இறைவன் : க்ஷீரராம லிங்கேஸ்வரர், திரக்ஷராமர், திரக்ஷராமா
இறைவி : மாணிக்காம்பாள்
தல சிறப்புகள் : இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும்.
தல வரலாறு : தாரகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த லிங்கங்களில் இதுவும் ஒன்று. சப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின் மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமான பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை. எனவே உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்ட அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தை தோண்ட, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து நிரம்பியது. இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி நிரந்தமாக பால் கிடைக்க வழியேற்பட்டது. எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று.
கோவில் அமைப்பு : தென்னிந்தியாவில் உள்ள ஐந்து சக்திவாய்ந்த சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று, கோயில்மண்டபத்தில் கருங்கல்லால் செய்யப்பட்ட 72 தூண்கள் உள்ளன, உள்ளே, கர்பலாயா , கோகர்ணேஸ்வர மற்றும் விக்னேஸ்வர அலயங்கள் இடதுபுறத்தில் உள்ளன. க்ஷிரலிங்கம் மையத்தில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம் திரேதாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி என்றும், க்ஷீர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர். இந்தக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால், காசியில் ஒரு வருடம் தங்கியதற்கு சமம். கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன. மூலவரான ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும், விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர். மூலவருக்கு வலப்புறம் தனித்தனி சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும், ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர். கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக் காணலாம். மேலும் பார்வதி, லட்சுமி, நாரேச்வரலிங்கம், துண்டி விநாயகர், வீரபத்ரர், சப்தமாதர்கள், கனக துர்கா, பிரம்மா, சரஸ்வதி, குமாரசுவாமி, மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், தத்தாத்ரேயர், காலபைரவர், சனீஸ்வரர், ராதா கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம்.
காலை 5.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : ராஜமுந்திரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாலகொல்லு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை