மதுரை, இம்மையிலும் நன்மை தருபவர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் தெற்கு மாசி வீதி -மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் புகைவண்டி நிலையம் ஆகியவற்றிற்கு மிகவும் அருகில் நடந்து சென்று அடைந்துவிடும் தூரத்திலேயே அமைந்துள்ளது.
இறைவன் : இன்மையில் நன்மை தருவார்,ஸ்ரீசொக்கநாதர்
இறைவி : ஸ்ரீமீனாட்சியம்மைநடுவூர் நாயகி்
தல விருட்சம் : வில்வம் மரம்
தல சிறப்புகள் : இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு : இறைவன் தன்னைத் தானே பூஜித்துக்கொண்ட அருள்மிகு இன்மையில் நன்மை தருவார் திருக்கோயிலாகும். சிவபெருமான் பாண்டிய மன்னனாக பிறந்து சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து தன்னைத்தானே வழிபட்ட தலம். இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்து இறைவனை வணங்கினால் இப்பிறவி மறுமை பிணி இவற்றையெல்லாம் நீக்கி முக்தி கிடைக்கும். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பிருதிவி தலம் ஆகும்.
மதுரையை ஆண்ட மீனாட்சி திக்விஜயம் செய்து மூன்று உலகங்களையும் வென்றார். கடைசியில் கயிலாயத்திற்கு செல்கிறார். அங்கு உலகு நாயகனான சிவபெருமானை சந்தித்த உடனே சக்தி சாந்தமடைகிறார். மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கிறது. மதுரையில் சுந்தரேஸ்வரர் எட்டு மாதமும் மீனாட்சி நான்கு மாதமும் ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. மன்னர்கள் ஆட்சி பொறுப்பேற்கும் முன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது மரபு. இந்த மரபை தானும் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக சுந்தரேஸ்வரர் தன் ஆத்மாவை சிவ லிங்கமாக பிரதிஷ்டை செய்து அதற்கு தானே பூஜை செய்து பின்பு ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டார்.இவ்வாறு சுந்தரேஸ்வரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் சுந்தரபாண்டிய மன்னனான அவருக்கே வரம் அருளிய லிங்கமே இம்மையிலும் நன்மை தருவார் என அழைக்கப்படுகிறது.
வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறுகிறது. அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருக்கண் மண்டபமாக விளங்குகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு வந்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. சிவபெருமானே சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் இது. எனவே இந்தத் தலத்தை, ஆத்ம லிங்க க்ஷேத்திரம் என்று போற்றுகின்றன புராணங்கள்.
கோவில் அமைப்பு : கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு பின்புறத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். உலக உயிர்களின் நன்மைக்காக சிவபெருமான் மேற்கு நோக்கியபடி அமர்ந்து, சிவலிங்கத்தை கிழக்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், இம்மையிலும் மறுமையிலும் வருகிற எல்லா இடர்பாடுகளையும் கருணையுடன் களைந்து, அருள்பாலிப்பார் என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீவரஸித்தி விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமத்திய புரி அம்மன், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் ஜுரத்தைக் நீக்கும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி அளிக்கும் சன்னதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் விசாலாட்சியுடன் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் சண்டிகேஸ்வரை சிவனிடம் பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். பைரவர் சன்னதி புகழ்பெற்றது. இங்கு அம்பாள் சன்னதி பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது. திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் அம்மனுக்கு "மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார்.
திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் அம்மனுக்கு "மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்து வந்து வழிபட்டு, அம்மண்ணைக் கொண்டு கட்டிடத்தை எழுப்புகிறார்கள்.சிவபெருமானே மதுரையின் அரசராக பொறுப்பேற்கும் முன் இங்கு லிங்க பூஜை செய்ததால், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை