பழங்காநத்தம், காசி விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இறைவன் : காசி விஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல சிறப்புகள் : ஏப்ரல் 5 முதல் மே 5 வரை காலை 6.35 முதல் 7.15 வரையிலும், செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை காலை 6.40 முதல் 7.15 வரையிலும் சூரிய ஒளி முக்திதரும் காசிவிஸ்வநாதர்மீது விழுகிறது.
மதுரையை ஆண்ட சடையவர்ம விக்ரமபாண்டியன் இக்கோயிலைக் கட்டினான். முக்தி தரும் தெய்வமான காசி விஸ்வநாதரைத் தினமும் வழிபட வேண்டும் என்பது இவனது ஆசை. ஆனால்,தினமும் காசி சென்று வழிபட இயலாதென்பதால், பதஞ்சலியின் யோக பீடத்தில் கோயில் கட்டி அதில் காசி விஸ்வநாதர் விசாலாட்சியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியடைந்தார்.இங்கு விஸ்வநாதர் கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பொதுவாக, பெரிய லிங்கங்களை நின்ற கோலம் என்றும், இதற்கடுத்த நிலையில் உள்ள இலிங்கங்களை அமர்ந்த கோலம் என்றும், சிறிய இலிங்கங்களைக் கிடந்த கோலம் என்றும் சொல்வதுண்டு.
கோவில் அமைப்பு : விசாலாட்சி சிவனின் ஆவுடையார் மேல், தாமரை மலரில், ஸ்ரீ சக்கரத்தில் நின்று அருள்பாலிப்பதால் முப்பீட நாயகி என அழைக்கப்படுகிறாள். இவர்களை வழிபட்டால் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். இராகு கேதுவுக்கு அதிபதியான பதஞ்சலி மகரிஷி முக்கிய வழிபாட்டுத் தெய்வம். இங்கு இறைவன் வாயு ரூபத்தில் இருக்கிறார். அதற்கு சான்றாக காற்று புக முடியாமல் வடிவமைக்கப்பட்டுள்ள விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் உள்ள விளக்கு எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு தேவையான நோயற்ற வாழ்க்கையும், ஞானமும்,முக்தியும் இந்த தலத்திற்கு சென்று வழிபட்டால் கிடைத்து விடும். பதஞ்சலிக்கு “துலாபாரம்”காணிக்கை செலுத்துவது விசஷேம். யோகம், தியானம் செய்ய விரும்புபவர்கள் இங்கு வந்து பதஞ்சலி அமர்ந்த வில்வ மரத்தின் கீழ் வடக்கு பார்த்து அமர்ந்து யோகாசனம் செய்தால் மனம் தெளிவடையும், ஞான வேட்கை உண்டாகும். ஞாபக சக்தி பெருகும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இங்கு சிவ தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க, முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சாதாரணமாகக் கோயில்களில் சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை சன்னதி தான் இருக்கும்.ஆனால், இங்கு கனக துர்க்கை அருள்பாலிக்கிறாள். செவ்வாய், வெள்ளி ராகு காலத்தில் மஞ்சள்நிற அரளியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்.
காலை 5.30 மணி முதல் பகல் 8.30 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை