மயிலாடுதுறை, வதாரண்யேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.
இறைவன் : வதாரண்யேசுவரர்
இறைவி : ஞானாம்பிகை
தல தீர்த்தம் : காவிரி
தல சிறப்புகள் : மயிலாடுதுறையில் இக்கோயில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவன் கோயில்களில் நந்தியை மூலவரான லிங்கத்திருமேனி முன்பு காணமுடியும். இக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுகிறது. இந்த தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். காவிரியில் நந்தி நீராடிய இடம் ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோயில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்குமென்று நம்புகின்றனர். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்த பலனுக்கு நிகர் கிடைக்கும் என்கின்றனர். சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலமாகும்.கோயிலின் வடக்கில் ஞான புஷ்கரணி உள்ளது.
தல வரலாறு : பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார்.
அதற்கு சிவபெருமான், நந்தி இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவத்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும்.
இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. இவள் ருத்ர அம்சம். சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும், இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும்.
முன்பொரு முறை தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை அழைத்துச்சென்ற காலகட்டத்தில் பார்வதி மயில் உருவமெடுத்து சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தார். இந்த அரிய காட்சியை காண பிரம்மா அன்னத்திலும், பெருமாள் கருடன்மீதும், தேவர்கள் குதிரை மீதும் வந்தனர். மற்றவர்களைவிட வேகமாகச் சென்ற ரிஷபத்திற்கு தான் வேகமாகச் செல்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இதை உணர்ந்த சிவன் தன் முடி ஒன்றை எடுத்து அதன்மீது வைத்து அதன் வேகத்தை அடக்கியதாகக் கூறுவர்.இப்பாவத்தைப் போக்க நந்தியை காவிரிக்கரையில் தவம் செய்ய இறைவன் கூறினார். பின்னர் ஞானத்தைப் பெற்ற நந்தி சிவனுடையே இருக்கவேண்டும் என்ற தன் ஆவலைப் வெளிப்படுத்தியது. அவரும் நந்தியின் எண்ணத்தைப் பூர்த்தி செய்தார்.
ஐப்பசியில் துலா மாத விழா, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை கடைசி வியாழன் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை