தெற்கு பொய்கைநல்லூர், சொர்ணபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள பரவை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இறைவன் : சொர்ணபுரீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தல சிறப்புகள் : காட்டுப்பகுதியில் இக்கோயில் உள்ளதால் அம்மனுக்குக் காவலாக நாகம் இருப்பதாக நம்புகின்றனர். அம்மன் கோயில் கதவுக்கு முன் புறத்தில் நாகம் படுத்திருப்பதாகவும், கோயிலின் பூசாரி கோயில் கதவைத் திறக்கும்போது, மணியொலியைக் கேட்டு நாகம் மறைந்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.
தல வரலாறு : ஒரு காலத்தில், இலுப்பமரக்காடாக இருந்த நாகப்பட்டினத்தில், காவல் தெய்வத்துக்கு கோயில் கட்ட அங்கிருந்த வணிகர்கள் முடிவு செய்தனர். விக்ரகங்கள் செதுக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு தான் கோயிலுக்கான அஸ்திவாரம் பொய்கைநல்லூர் பகுதியில் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியிலிருந்து சுவாமி, முருகன் வள்ளி, தெய்வானை சிலைகளும் பரிவார மூர்த்தி சிலைகள் கிடைத்தன. கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சிலைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். தற்போதைய அம்பாள் சன்னதி அருகிலுள்ள பின்ன மரத்தை வெட்டும் போது, மரப் பொந்துக்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மரப்பொந்தில் முருகன், வள்ளி,தெய்வானை என பல சிலைகள் கிடைத்தன. மரப்பொந்தில் இருந்து கிடைத்த சிலைகளை கோயிலுக்குள்ளும், ஏற்கனவே செய்து வைத்திருந்த சுவாமி சிலைகளை கோயிலுக்கு வெளியேயும் பிரதிஷ்டை செய்தனர். இந்த கோயிலின் மூலவருக்கு சொர்ணபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினர். இவர்கள் அருகில் செல்லியம்மன் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள்.
வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் முருகன் சிலைகள் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை. இவை மூலஸ்தானத்தில் உள்ளன. கோயில் கட்டியவர்கள் உருவாக்கிய முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் மூலஸ்தானத்தில் இடதுபுறத்தில் வைக்கப்பட்டு அதற்கும் பூஜை செய்யப்படுகிறது. பூமியில் கண்டெடுக்கப்பட்ட முருகன் ஆறு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். தெற்கு பொய்கை நல்லூரிலும் ஆறு முகத்துடன் முருகன் அருள்பாலிக்கிறார். சுயம்பாக கிடைத்த முருகன் சிலை என்பதால் வேண்டிய வரங்களை உடனுக்குடன் வழங்கும் அருள் பெற்றவராக திகழ்கிறார்.
மும்மதத்தினரிடையேயும் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் விழாக்காலங்களில் செல்லியம்மன், வேளாங்கண்ணி, நாகை கடைவீதி ஆகிய பகுதிகளில் உலா வருகிறாள்.தொழில் அபிவிருத்தி ஏற்படவும், மீன் உற்பத்தி பெருகவும், நோய்கள் வராமல் இருக்கவும்,செல்வச் செழிப்பு ஏற்படவும் கோரி அனைத்து மதத்தவரும் தீமிதி விழாவில் பங்கேற்கின்றனர்.நாவுக்கரசரால் பாடல் பெற்றதலமாகவும் அமைகிறது. பெண்கள் திருமண வரம் கேட்டு இங்குள்ள காவல் தெய்வமான செல்லியம்மனை பிரார்த்தனை செய்கின்றனர். குழந்தை வரம் வேண்டியும், இராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபடுகின்றனர்.
காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகப்பட்டினம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை