ஓளவையாரம்மன் திருக்கோவில் குறத்தியறை
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலிலிருந்து கடுக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது குறத்தியறை. அழகியபாண்டியபுரம் அடையும் முன்பு உள்ள பிரிவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அம்மன் : ஓளவையாரம்மன்
சிறப்புகள்: பிரதான சன்னதியில் ஓளவையாரம்மன் திரு உருவம் வைக்கப்பட்டுள்ளது. ஒளவையார் மூதாட்டி மண்ணுலகம் தீத்து விண் உலகம் சென்றது இங்கு இருந்துதான். நாவல் மரங்கள் நிறைந்த பகுதில் அமைய பெற்ற கோவில். ஒளவையார் செய்து இருந்த திருமணத்திற்கு வருகை தந்த மூவர்கள் தங்குவதற்கு வசதியாக ஒளவையார் அமைத்த முப்பந்தல் ஒன்றும் உள்ளது.
கோயில் அமைப்பு : குதிரை லாடம் போலக் குடையப்பட்டிருக்கும் கருவறையின் தரை, கூரை, சுவர்கள் அனைத்தும் சீர்பெறா நிலையிலேயே விடப்பட்டுள்ளன. உயரம் பெற்றுள்ள கருவறையின் பின்சுவரில் தரையிலிருந்து 40 செ.மீ. உயரத்தில் அமையுமாறு கோட்டம் ஒன்று அகழ்ந்து விஷ்ணு உருவாக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வகழ்வால் பின்சுவரின் கீழ்ப்பகுதி ஒரு மீட்டர் அகலத்தில் விஷ்ணு நிற்க வாய்ப்பான தளம் போல வடிவெடுத்துள்ளது. கோட்டத்தின் இருபுறமும் நன்கு வடிவமைக்கப்படாத நான்முக அரைத்தூண்கள் என சுவர்த் துண்டுகள் அமைய, மேலே முழுமை உறாதனவாய்ப் போதிகைகள். அவற்றின் விரிகோணக் கைகள் தாங்குமாறு வரையறுக்கப்பட்டுள்ள உத்திரம் விஷ்ணுவின் தலைப்பகுதிக்காக அவ்விடத்தில் மட்டும் தன்னில் பெரும்பகுதியை இழந்து மெலிந்துள்ளது. வாஜனம், வலபி, கபோதம் இடம்பெறவில்லை.
பின்சுவரில் சமபாதநிலையில் காட்சிதரும் விஷ்ணுவின் சிற்பம், தொடர்ந்த எண்ணெய்ப்பூச்சால் உறுப்புகள் தேய்ந்து மழுங்கி உள்ளது. தலைச்சக்கரம் பெற்ற கிரீடமகுடம், குண்டலங்கள் இவற்றை அடையாளம் காணமுடிந்தாலும் குண்டலங்களை இன்னவை என உறுதிப்படுத்தக் கூடவில்லை. பின்கைகளில் வலப்புறம் சங்கு, இடப்புறம் சக்கரம். முன் கைகளில் வலக்கை இடுப்பில் அமர, இடக்கை இடுப்பருகே ஏந்தலாக உள்ளது. நிவீத முப்புரிநூல், கச்சம் வைத்த பட்டாடை, முடிச்சுத் தொங்கல்களுடனான இடைக்கட்டு இவை அமைந்திருக்கும் விதம் சிற்பத்தின் காலத்தைக் கி. பி எட்டாம் நூற்றாண்டாகக் கொள்ளவைக்கிறது.
இக்கருவறைக் குடைவரையின் வெளிப்புறத்தே பாறைச்சரிவின் மேற்கில் ஒரு கோட்டமும் கிழக்கில் ஒரு கோட்டமும் அகழப்பட்டுள்ளன. மேற்குக் கோட்டத்தில் பிள்ளையார் இடஒருக்களிப்பில் சற்று மாறுபட்ட இலலிதாசனத்தில் வலம்புரியாய்க் காட்டப்பட்டுள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, தோள், கைவளைகள், சிற்றாடை கொண்டு காட்சிதரும் அவருடைய வலத்தந்தம் முழுமையாக இருக்க, இடத்தந்தம் இல்லை. கடகத்தில் உள்ள பின்கைகள் சிதைந்துள்ளன. வலமுழங்கால் மேல் உள்ள வலக்கைப் பொருளைச் சிதைவின் காரணமாக அடையாளப்படுத்தக் கூடவில்லை. இடமுன்கை தொடை மேல் கடகமாக உள்ளது. பாதத்தின் மேற்புறம் தெற்குப் பார்வையாகுமாறு இடக்கால் கிடையாக அமைய, வலக்கால் குத்துக்காலாகப் பாதம் பார்சுவத்தில் திருப்பப்பட்டுள்ளது. வடிவமே இல்லாத நிலையிலும் இவ்வகழ்வை, 'அவ்வையார் அம்மன்' என்று உள்ளூர் மக்கள் வழிபடுவதை அறியமுடிந்தது.
குறத்தியறைக் கருவறைக் குடைவின் மிக எளிய அமைப்பு, அதன் இருபக்கக் கோட்டங்கள், உள்ளிருக்கும் சிற்பங்கள் கொண்டு அதன் தோற்றத்தைக் கி.பி. 8 நூற்றாண்டாகக் கருத, கருவறையில் விஷ்ணுவும் வெளிக்கோட்டத்தில் பிள்ளையாரும் இடம்பெற்றிருக்கும் பாங்கு, குடைவரையை உருவாக்கியவர்களின் சமய ஒத்திசைவு உள்ளம் காட்டுவதாகக் கொள்ளலாம்.
அருகிலுள்ள விமான நிலையம் : நாகர்கோவில்
அருகிலுள்ள ரயில் நிலையம் : தோவாளை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு