பனங்காட்டு ஈஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து ஐயங்கார்குளம் வழியாகப் பெருங்கட்டூர் செல்லும் சாலையில் திருப்பனங்காடு கூட்டு ரோடிலிருந்து 2 கி.மீ. வலப்புறமாகச் சென்றால் இவ்வூரை அடையலாம்.
1. சுவாமி : பனங்காட்டீசுவரர், தாளபுரீசுவரர்
அம்பிகை : அமிர்தவல்லி
2. சுவாமி : கிருபாநாதேசுவரர்
அம்பிகை : கிருபாநாயகி
தலமரம் : பனைமரம்
தீர்த்தம் : ஜடாகங்கை
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் தற்போது 'திருப்பனங்காடு' என்று வழங்கப்படுகிறது. பக்தன் ஒருவனுக்குத் திருவருள் புரியும் வகையில் சிவபெருமான் சடை முடியிலிருந்து துளிர்த்த நீர் இத்திருத்தலத்தின் எதிரே திருக்குளமாக விளங்குகின்றது. சிவபெருமான் சுந்தரருக்கு கட்டமுது நீர் அளித்த தலமாகும். வெண்பாக்கம் என்னும் ஊரை அடுத்து பனையை தலவிருட்சமாக கொண்டுள்ளதால் இத்தலம் 'திருவன்பார்த்தான் பனங்காட்டூர்' எனப் பெயர் பெற்றது. இங்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன.
சுவாமி சந்நிதிகள் கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதிகள் தெற்கு நோக்கியும் உள்ளன. இத்திருத்தலத்தில் அகத்தியர், புலத்தியர், நால்வர், பெருமக்கள், சேக்கிழார், வல்லபை கணேசர், மீனாட்சி சொக்கநாதர், கஜலட்சுமி, முருகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மன், திருமால் முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோயில் அமைப்பு : கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப்பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில் இதன் வழயாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப்பிரகாரத்தில் உள்ள பலிபீடம் கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே உள்ள ஆலயத்தில் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாளபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.
கயிலை மலையில் சிவன், பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்திசை நோக்கி செல்லும்படி சிவன் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாளபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீசுவரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அதேபோல் இரண்டு அம்பிகைகள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதியில் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாளபுரீஸ்வரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும் என்பது இக்கோவில்முறை.
அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாளபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் 'பனங்காட்டீசர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை