சந்திரசேகரர் கோவில், திருவக்கரை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் பிரியும் கிளைப் பாதையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. வராகநதி என்று வழங்கப்படும் சங்கராபரணி ஆற்றங்கரையில் இக்கோயில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும் பாண்டிச்சேரி - திண்டிவனம் பேருந்து பாதையில் 18 கி.மீ தொலைவிலும் உள்ளது.
சுவாமி : சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
அம்பிகை : அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர்-1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் உள்ள மரங்கள் கல்லாக மாறியுள்ள தன்மையுடையது. வக்கிராசுரன் பூசித்த பதி. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் அவதிப்படுபவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு இத்திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.
இத்திருத்தலம் வராக நதிக்கரையோரம் பல்லவர்களின் உன்னதமான கலைவண்ணம் மிளிர, அற்புதமான சிற்ப நுட்பங்களுடன் கிழக்கு நோக்கி தோற்றமளிக்கிறது. துர்க்கை இருக்க வேண்டிய இடத்தில், அதன் எதிர்ப்புறம் எட்டுத் தோள்களை வீசி ஆடும் காளி அருள்பாலிக்கிறாள். இவளைத் துர்க்கை என்றும் கூறுவர். கருவறையில் சிவபெருமான் மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார். காளியைப் பிரதட்சணம் செய்வோர் வலது பக்கமாக 5 முறையும்இ இடது பக்கமாக 4 முறையும் வலம் வர வேண்டும் என்பது வழிபாட்டு முறையாகும்.
சிவலிங்கத்தின் பாணப்பகுதியில் கிழக்கு தெற்கு வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் எனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம் தெற்கில் உள்ளது அகோர முகம் வடக்கில் உள்ளது வாமதேவ முகம் எனறு சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்றும் கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோயில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.
இத்தலத்தில் உள்ள திருவக்கரை வக்கரகாளியம்மன் சந்நிதி புகழ் பெற்றது. வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்கு மேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திண்டிவனம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை