அரசிலிநாதர் கோவில், திருஅரசிலி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பாதையில் தைலாபுரத்தை அடுத்துப் பிரியும் கிளைப் பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : அரசிலிநாதர், அரசலீசுவரர், அஸ்வத்தேசுவரர்
அம்பிகை : அழகியநாயகி, பெரியநாயகி
தலமரம் : அரசமரம்
தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம், அரசடித் தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் -1
திருத்தலச் சிறப்புகள்: வாமதேவ முனிவர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். இத்தலம் தற்போது ஒழிந்தியாப்பட்டு என வழங்கப்படுகிறது
சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இறைவன் மானுருவம் கொண்டு சத்தியவிரதன் என்னும் சாளுக்கிய மன்னனோடு வியைடிய பதி. பத்மபுராணத்தில் இத்தலப் பெருமை பேசப்படுகிறது. இத்தலத்தில் விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, வைஷ்ணவி,, சண்டேசுவரர், நால்வர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. திருஇரும்பைமாகாளம் திருவக்கரை ஆகிய தலங்கள் அருகே அமைந்துள்ளது.
தலபுராணம்: திருஅரசிலி என்னும் இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுப் திருத்தலங்கள் முப்பத்திரண்டினுள் ஒன்றாகும் இத்திருத்தலம் திருஞானசம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்ற சிறப்பிற்குரியதாகும்.
இத்திருத்தலத்தே எழுந்தருளியுள்ள இறைவனுக்கு சாளுவதேச மன்னன் திருப்பணி செய்துள்ளான். வாமதேவ முனிவர் இங்கு வழிபட்டுள்ளார்.
சாளுவ மன்னன் தனது நித்திய பூசைக்காக நந்தவனம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தான். அச்சமயம் பரமநாடகன் அவ்வரசனை சோதிக்கும் பொருட்டு மான் வடிவு கொண்டு அந்த நந்தவனத்தில் மேயலானார். இதனைக் கண்ட காவலர் அரசனிடம் மான் நந்தவனத்தில் மேய்வதாகக் கூற மன்னன் தானே நேரில் வந்து அந்த மானைத் துரத்த முயற்சி செய்தான்.
மானுருக்கொண்ட பரம்பொருள் அவ்வரசனின் தூய அன்பிற்கும் திருத்தொண்டிற்கும் இடையூறு ஏற்படக் கூடாது என்று திருவுளம் கொண்டு தலவிருட்சமான அரசமரத்தின் அடியில் கண்ட புற்றினுள் மறைந்துவிட்டார். அது கண்ட அரசன் காவலரை ஏவி அப்புற்றினுள் தேடச் செய்தான்.
அவ்வமயம் புற்றினுள் அமைந்த பரம்பொருள் சிவலிங்க வடிவுடன் காட்சி கொடுத்தார். காவலரின் செய்கையால் காயமுற்ற திருமேனியல் குருதி வடிவதைக் கண்டு அரசன் மிகவும் மனம் வருந்தினான். உடன் சுயம்பு மூர்த்தியின் நெற்றியில் பட்டம் சூட்டி அவிவிடத்திலேயே பிரதிஷ்டை செய்வித்தான். அக்காலம் பிரதோஷ காலமாக இருந்தது. ஆகவே இத்திருத்தலம் பிரதோஷ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மூலவர் மிகச்சிறிய வடிவில் கருவறையுள் காணப்படுகிறார். அம்பாள் தென் முகமாக அமர்ந்து அருள் பாலிப்பது சிறப்பாகும்.
காலை 7 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திண்டிவனம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை