பனங்காட்டீசர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்தில் இத்தலம் உள்ளது. திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் விக்கிரவாண்டியை அடுத்து இடப்புறமாகச் செல்லும் பண்ருட்டி சாலையில் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு விழுப்புரம் ரயில் பாதையில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விழுப்புரம் - பாண்டி (திருக்கனூர் வழி) செல்லும் பேருந்தில் சென்று கோயிலருகில் இறங்கலாம்.
சுவாமி : பனங்காட்டீசவரர், நேத்திரோத்தாகேசுவரர்
அம்பிகை : புறவம்மை , சத்தியாம்பிகை
தலமரம் : பனைமரம்
தீர்த்தம் : பத்ம தீர்த்தம்
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் தற்போது 'பனையபுரம்' என வழங்கப்படுகிறது. தக்கன் செய்த வேள்வியில் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட சூரியன், இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியுள்ளன. இத்திருத்தலத்தில் அடைக்கலமாக வந்த புறாவுக்குத் தன் கண்களை அளித்த சிபிச் சக்கரவர்த்தி இறையருளால் கண்பார்வை பெற்றார். இதனால் இறைவன் கண்பறித்தருளிய கடவுள் எனவும் வழங்கப்படுகிறது. இங்கு விநாயகர், முருகர், திருமால், கஜலட்சுமி, நால்வர், பிட்சாடணர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், நவக்கிரகங்கள், 63 நாயன்மார்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்கு சித்திரை மாதம் முதல் நாள் முதல் ஏழாம்நாள் வரையில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் தோன்றும் பொழுது கதிர்கள் முதலில் இறைவன் மேலும் பின்பு இறைவி மேலும் விழுகின்றன.
தல வரலாறு: சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.
கோவில் அமைப்பு: 4 நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் நுழைந்து உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்திலுள்ளது. உள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறை சுற்ற்ப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. இவற்றில் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள சுற்ற்றில சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன.
அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : முண்டியம்பாக்கம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை