வசிஷ்டேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - திருக்கருகாவூர் நகரப்பேருந்துகள் இவ்வூர் வழியாக செல்கின்றது. திட்டை ரயில்நிலையம் அருகிலேயே உள்ளது.
சுவாமி : வசிஷ்டேஸ்வரர், தேரூர்நாதர்
அம்பிகை : சுகந்த குந்தளாம்பிகை
தலமரம் : ஆலமரம்
தீர்த்தம் : சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.
சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. அழகிய கருங்கல் திருப்பணியுடன் ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை. இக்கோவில் விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் பொருந்தியதாய் உள்ளன.
தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை