சக்ரவாகேஸ்வரர் கோவில், திருசக்கரப்பள்ளி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் ரயில் மார்கத்தில் உள்ள ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது
சுவாமி : சக்கரவாகேஸ்வரர்
அம்பிகை : தேவ நாயகி
தீர்த்தம் : காவிரியாறு, காக தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் குபேரன், பிராமி ஈசனைப் பூஜித்து தாங்கள் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலம் இந்திரன் மகன் சயந்தனும், தேவர்களும் வழிபட்ட திருவூர். லிங்கபுராணம் முதலியவற்றில் சிறப்பித்து கூறப்பட்ட தலங்கள் ஏழனுள் இதுவும் ஒன்று. மற்றவை அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுபதிமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்பனவாகும். இவை முறையே மகேசுவரி, கௌமாரி, வைணவி, வராகி, மகேந்திரி, சாமூண்டி என்பவர்களால் வழிபட்டவையாகும்.
இத்தலத்தில் திருமால் சிவபெருமானிடமிருந்து சக்ராயுதம் பெற்று போருக்குப் புறப்பட்டதால் இத்தலத்திற்குத் திருச்சக்கரபள்ளி என்று பெயர் ஏற்பட்டது. இங்கு சதா சர்வகாலமும் எரிந்துகொண்டேயிருக்கும் குண்டத்தில் குங்குலியத்தை போட்டு வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.
கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே சுதைச் சிற்பங்களாக ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிவன், பார்வதி, மற்றும் விநாயகர், முருகர் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தில் கொடிமரமில்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மூலவர் கருவறைக்குச் செல்லும் இரண்டாவது நுழைவாயிலிலும் மேலே சுதைச் சிற்பங்கள் உள்ளன. ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்துள்ள சிவன், பார்வதி, ஒருபுறம் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்துள்ள விநாயகர், மறுபுறம் மயில் வாகனத்தில் அமர்ந்துள்ள தண்டபாணி ஆகியோரைக் காணலாம். கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். தேவேந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் இத்தல இறைவனை பூசித்த தலம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறர். கருவறையின் கீழ்புறம் கருங்கல்லாலும், மேல்புரம் விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. மேலும் சக்ரவாகேஸ்வரர் சப்தஸ்தான திருவிழாவில் உலா வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். திருச்சக்ரவாகேஸ்வரரை வணங்குவதால் நவக்கிரஹத்தை வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் இங்கு நவக்கிரஹ சந்நிதி கிடையாது.
இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் முருகப்பெருமானின் முனபுறம் உள்ளது. திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது
தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஐயம்பேட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை