சண்பகாரண்யேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவிடைமருதூருக்கு தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்
அம்பிகை : பிறையணிநுதலாள், கிரிகுஜாம்பிகை
தலமரம் : சென்பகம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் முதலிய 12 தீர்த்தங்கள்
பதிகம் : திருநாவுக்கரசர் - 3, திருஞானசம்பந்தர் - 2, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் சண்பகவனம், கிரிகன்னிகை வனம் எனவும் பெயர் பெறும். இத்திருத்தலம் ராகு கிரகத்திற்கு உரிய தலம். சேக்கிழார் சுவாமிகள் திருப்பணி செய்த தலம். மேலும் சூரியன், சந்திரன், ஆதிசேஷன், தட்சன், கார்க்கோடகன் முதலிய நாகராஜாக்கள் கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன் முதலியோர் வழிபட்டது. மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இத்திருவூரின் மேல் 'தொண்டர்சீர் பரவுவார்' ஆகிய சேக்கிழாரடிகள் பெரும் அன்புடையார். அதன் அடையாளமாக தன் ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சரம் எனத் திருக்கோயில் எழுப்பியுள்ளார். இத்தலத்தில் சேக்கிழார் சிலையும் உள்ளது சங்கநிதி, பதுமநிதி, மாசாத்தா இவர்கள் திருவுருவங்களும் இங்கு உள்ளன. சுந்தரர் அருகே பரவை நாச்சிர் சிலைகளும் உள்ளன.
ராகு பகவான் சிவபெருமானைப் பூஜித்த தலமாதலால் நாகேஸ்வரம் என்று பெயர் வந்தது. காலையில் குடந்தைக் கீழக்கோட்டம், பகலில் திருநாகேஸ்வரம், மாலையில் திருப்பாம்புரம் ஆகியவற்றை வணங்குதல் சிறப்பு எனக் கருதப்படுகிறது. இத்தலபுராணத்தில் பெருமானுக்கு இருவடிவங்களும் அம்மைக்கு இருவடிவங்களும் சொல்லப்படுகின்றன. அவை சண்பகமரத்தடியில் மறைந்த நாகநாதர் சந்நிதியும், அர்த்தநாரீசர் சந்நிதியும் உமை சந்நிதியும் கிரிகுஜாம்பிகை சந்நிதியும் ஆகும். பிரகாரத்தில் விநாயகர், முருகர், நடராஜர், சேக்கிழார், ராகு, கலைமகள், திருமகள் முதலிய சந்நிதிகள் உள்ளன.
நாக அரசராகிய ராகு பகவான் சிவபெருமானை பூசித்த திருத்தலமாகும். வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீஇராகுபகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். மேலும் இராகு பகவான் ஸ்ரீநாகநாதசுவாமியை வழிபட்டதோடு அல்லாமல், தன்னையும் வழிபடுவோர்க்கு பல நலன்களை அருளும் வரமும் பெற்றுத் திகழ்கின்றார்.
பொதுவாக இராகு-கேது கிரஹங்கள் எப்படி ஏற்பட்டன என்பதைப் பண்டைய புராணங்கள் எடுத்தியம்புகின்றன. ஜோதிடமுறையில் பார்க்கும் போது இராகு பகவானின் பெருமை அளிவிடற்கரியதாகும். பூமியானது சிறிது நீண்ட வட்டகதியில் சூரியனைச் சுற்றிவருகிறது. அதே போன்று சந்திரனும், பூமியை இரு இடங்களில் சந்திக்கின்றது. சந்திரன் மேல்நோக்கிச் செல்லும் போது, பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் இராகு எனவும், சந்திரன் கீழ்நோக்கி கேது எனவும் பெயர் பெறும்.
நவகிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட இராகுவும், கேதுவும் பலம்பொருந்தி விளங்குகின்றனர். சோதிட முறையில் இதனை 'நைசர்க்க பலம்' என்று கூறுவர். சந்திர, சூரியனையுயும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குறையும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இராகு-கேதுவுக்கு உண்டு.
திருநாகேஸ்வரத்தில் மட்டுமே இராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இருதேவியருடன் தனிக்கோயில் கொண்டு மங்கள இராகுவாக அருள்பாலிக்கிறார்.
ஐந்தலை அரவு எனும் இராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுவது இவரது தனிச்சிறப்பாகும். மேலும் 16.02.88 அன்று இராகுவின் திருமேனியில் 5 அடி நீளமுடைய பாம்பு தனது சட்டையினை உரித்து, மாலையாக அணிவித்து இருந்த காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டதோடு அதன் மூலம் அரவு வடிவில் விளங்கி, அன்பர்களுக்கு அனுக்ரகம் புரிந்து வருகிறார் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. இந்நிகழ்ச்சியை அடுத்து அப்பாம்புச் சட்டையை பெரிய கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாகத் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது
கோயில் அமைப்பு : ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.
அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.
கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.
மூலவர் அமைந்த கருவறையை அடுத்த முதல் பிரகாரத்தில் மேல்புற விநாயகர், சந்திரசேகரர், முருகன், பஞ்சலிங்கம், இலக்குமி முதலிய சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அறுபான்மும்மை நாயன்மார்கள், நடராஜப்பெருமான் சந்நிதிகளும், பள்ளியறையும் உள்ளன. தென்பால் சேக்கிழார், பாலறாவாயர், அவர் தாயார், நால்வர் சந்நிதிகளும் உள்ளன. சேக்கிழார் சந்நிதிக்கு வடபால் அமைந்த அதிகார நந்தி சிலாவிக்கிரகம் காண அரியதொன்று.
இத்தலத்தில் மற்றொரு அம்மனாகிய கிரிகுஜாம்பிகை சந்நிதி தனிக்கோயிலாக காணப்பெறுகின்றது. இச்சந்நிதியின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் சமண முனிவர்கள் சிலைகள் உள்ளன. இத்தலம் ஒரு காலத்தில் சமணர் செல்வாக்கு பெற்றிருப்பதை இவை நினைவூட்டுவதாக உள்ளது. ஊரின் கிழக்கேயுள்ள சன்னாபுரமும் இதனை வலியுறுத்துகின்றது. கிரிகுஜாம்பிகை தவக்கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். பக்கத்தில் கலைமகளும், திருமகளும் விளங்குகின்றனர். தேவியின் வடிவம் சிலாவிக்கிரகம் இல்லாமையின் அபிஷேகம் கிடையாது. தை ஆடி மாதங்களில் -புனுகுத்தைலம் சாத்தப்பெறுகின்றது.
இத்தலத்து விநாயகர் சண்பக விநாயகர் என்றும், சான்று விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் கட்டளைப்படி முதலில் தன்னை பூசித்து வழிபட்டுச் சான்றாக விளங்கியதால் சான்று விநாயகர் என்றழைக்கப்படுகிறார். மூலவருக்கு நாகநாதர், நாகேச்சரர் எனும் பெயர்கள் உள்ளன. கல்வெட்டுகளில் சுவாமிக்கு சண்பகாரண்யேசுவரர் திருநாகேஸ்வரம் உடையார் மகாதேவர் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.
தினந்தோறும் காலை 6.00 முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 முதல் 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு