ஐராவதேஸ்வரர் கோவில், திருகோட்டாறு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாற்றுக்குப் போகும் மயிலாடுதுறை - காரைக்கால், கும்பகோணம் - காரைக்கால் பேருந்துகளில் சென்று கொட்டாரம் சந்திப்பில் இறங்கி 1 கி.மீ நடந்து இவ்வூரை அடையலாம். அம்பகரத்தூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2 கி.மீ சென்றும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : ஐராவதீசுவரர்
அம்பிகை : சுகந்த குந்தளாம்பிகை, வண்டமர் பூங்குழலி
தலமரம் : பாரிசாதம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், வாஞ்சியாறு
பதிகம் : திருஞானசம்பந்தர் - 2
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் வெள்ளையானை வழிபட்டுப் பேறு பெற்றது சிறப்பு. குமார புவனேசுவரர், அகத்தியர் முதலியோர் வழிபட்ட தலம். இத்தலத்தினை இளையான் குடிமாற நாயனார்க்குரிய 'இளையன்குடி' என்றும் சிலர் கூறுவர். வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறு போலச் சொரிவித்து வழிபட்டதால் இத்தலம் 'கோட்டாறு' எனப் பெயர் பெற்றது என்பர்.
கோவில் அமைப்பு: மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி. வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது. விசாலமான வெளிச் சுற்று. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள்ளன. பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள் காணப்படுகின்றன. உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுப முனிவர், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன. சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் மிகச் சிறிய உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
மூலவர் கருவறையில் தேன்கூடு உள்ளது. இந்த தேன்கூடு பல்லாண்டுக் காலமாக இருந்து வருகின்றது. சுபமகரிஷி என்பவர் தினந்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு மூடப்பட்டு விட்டது. அதைக் கண்ட சுபமகரிஷி தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கி விட்டார். அக்காலம் முதல் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது. தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் அபிஷேகம் செய்கிறார்கள். மீண்டும் தேன்கூடு கட்டப்படுகின்றதாம். இந்த சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.
தல வரலாறு: தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு முறை துர்வாசரை அவமரியாதை செய்தது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானை மீது அமர்ந்து பவனி வரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். துர்வாச முனிவரின் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுகள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடல் புராண வரலாறு. அவ்வாறு வெள்ளை யானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல தலங்களுள் திருகோட்டாறு தலமும் ஒன்று என்பர். வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் பெய்யச் செய்து வழிபட்டதால் இத்தலம் கோட்டாறு எனப் பெயர் பெற்றது.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கும்பகோணம் - காரைக்கால் பிரதான சாலையில் கொல்லுமாங்குடி, பேரளம் தாண்டியவுடன் அம்பகரத்தூர் காளி கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் ஐராவதேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் இவ்வழியே வந்து ஆலயத்தை அடையலாம்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : அம்பகரத்தூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை