வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை - பேரளம் ரயில் பாதையில் நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். கும்பகோணத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : வாஞ்சிநாதேசுவரர், வாஞ்சிலிங்கேசுவரர்
அம்பிகை : மங்களநாயகி, வாழவந்தநாயகி
தலமரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்தகங்கை, இயம தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: காவிரிக்கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக போற்றப்படுகின்றன. அவற்றில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். திருமகள் பூசித்துப் பேறு பெற்ற தலம். எமன் வழிபட்ட தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். தன்னைப் பிரிந்த திருமகளை மீண்டும் அடைய, விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலமாதலால் திருவை வாஞ்சித்த இடம் திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு : இவ்வாலயம் 3 கோபுரங்களுடன் 3 பிரகாரங்களை கொண்டுள்ளது. பிரதான ராஜகோபுரம் 5 நிலைகளுடன் உயரமாக காட்சியளிக்கிறது இத்தலத்தில் எமனுக்கு தனிசந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். கோவிலின் மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது. அனைத்து உயிர்களை எடுக்கும் பதவியை உடையதால் எமனை எல்லோரும் திட்டியதாலும், பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு எமன் இத்தலம் வந்து, தனக்கு ஏற்படும் பாவம் தீர, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும், உயிர்களை எடுக்கும் பாவமும், பழியும் எமனை வந்தடையாது என்று வரமளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தரவேண்டும் என்றும் வரமருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி, முதலில் யமனை வழிபட்டு, பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும்.
உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோக நிலையில் காணப்படுகிறார். பைரவர் சந்நிதியை அடுத்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு, கேது சந்நிதி இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.. ராகு கேதுவிற்கு பாலபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறிவிடும். இத்தலத்தில் ராகு, கேதுவை வழிபடுவது திருமணத்தடைகள் நீங்கும் என்றும், நரம்பு சம்பந்தபட்ட வியாதிகள் நீங்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும். இத்தல விநாயகர் 'அபயங்கர் விநாயகர்' என்ற திருநாமத்துடன் வழங்கப்படுகிறார்.
இத்திருத்தலத்தின் வேறு பெயர்களாவன ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம் என்பனவாகும். இங்கு விநாயகர், முருகர், பஞ்சபூதலிங்கங்கள், ஜேஷ்டா தேவி, சனிபகவான், அகோரேசுவரர், பஞ்சநாதேசுவரர், மயூரநாதேசுவரர், மகாலிங்கேசர் முதலான சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராஜசபை சிறப்பு வாய்ந்தது. கருவறைச்சுற்றில் உள்ள தெற்கு பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் உருவச்சிலைகள் உள்ளன. மஹாலெட்சுமி மற்றும் மகிஷாசுரமர்தினி சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்றநிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும். கங்கா நதியானவள் தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்துவிட்டு மற்ற 999 கலைகளுடன் இத்தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் 'குப்த தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது.
பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நன்னிலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை