வெண்ணைப்பிரான் கோவில், சிக்கல்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் தலம் உள்ளது.
சுவாமி : வெண்ணெய்நாதர், நவநீதேசுவரர்
அம்பிகை : சத்தியதாட்சிவேல், நெடுங்கண்ணி
தலமரம் : குட மல்லிகை
தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி, கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களில் 70-ல் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள சிங்கார வேலர் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. மேலும் இத்திருத்தலத்தில் விசுவாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர், இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம். ஒருசமயம் பஞ்சத்தின் பிடியில் அகப்பட்ட தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் இத்தலம். முசுகுந்தச் சக்கரவர்த்தி ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட 'பிரம்மஹத்தி' தோஷம் நீங்கிய தலம்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில், சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்க, முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இங்கு கந்தசஷ்டி விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருத்தல வரலாறு : புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்காலகட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தில் மேறகுப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும், க்ஷிரபுஷ்கரிணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராணம் மூலம் அறியப்படுகிறது.
கோயில் அமைப்பு : இதன் இராஜகோபுரம் 7 நிலைகளை உடையது. தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபாணியும் காட்சி தருகின்றனர். இரண்டாவது சுற்றில் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோயிலின் மையத்தில் உயரமான படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீதநாதர் லிங்க வடிவில் அருள்புரியும் சந்நிதியும் சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகபெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கட்டுமலையின் கீழ்பக்கம் இறைவி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரத்தை சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது.
தினந்தோறும் காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நாகப்பட்டினம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை