அபிமுக்தீஸ்வரர் கோவில், திருப்பெருவேளூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து தென்மேற்கே 10 கி.மீ தொலைவில் வெட்டாற்றின் வடகரையில் உள்ள இத்திருவூர் தற்போது மணக்கால் ஐயன் பேட்டை என வழங்கப்படுகிறது. மேலும் கும்பகோணம் - குடவாசல் - திருவாரூர் சாலையில் மணக்கால் என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மீ நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். தலையாலங்காடு என்ற மற்றொரு பாடல்பெற்ற சிவஸ்தலத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : அபிமுகேசுவரர், பிரியா ஈசுவரர்
அம்பிகை : அபிமின்னாம்பிகை, ஏலவார்குழலம்மை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : சரவணப் பொய்கை
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இது கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில். இத்திருத்தலம் திருமால் மோகினி அவதாரம் கொண்ட நிலையில் பூசித்த தலம். பிருங்கி முனிவர், கௌதமர் வழிபட்ட தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் வைகுந்த நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் பல உள்ளன. அவற்றில் பெருவேளூர் தலமும் ஒன்றாகும். முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் பெருவேளூர் எனப்பட்டது.
இக்கோயிலுள் வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியது. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகக் கிழக்கு நோக்கியுள்ளது. பிராட்டி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். இத்தலத்திற்கு அருகில் உள்ளவை திருவிளமர், கரவீரம், தலையாலங்காடு, எண்கண் முதலிய சிவஸ்தலங்களாகும். வாயுவுக்கும், ஆதிசேடனுக்கும் இடையே நடந்த போட்டியில் வந்து விழுந்த கையிலைச் சிகரங்களுள் இதுவும் ஒன்று. நடராஜர் சபை உள்ளது. இம்மண்டபம் வௌவால் நெத்தி மண்டபம் அமைப்புடையது.
இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது பிரதான விநாயகர் சந்நிதி, அதையடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி, அடுத்து யோகசண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை உள்ளன. கிழக்கு வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் மாடக்கோவிலுக்குச் செல்லும் படிகள் உள்ளன. மாடக் கோவிலில் உள்ளே இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.மேலும் இந்த வெளிப் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லிங்கம் சரஸ்வதீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார். இத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்கள். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நன்னிலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை