பரிதியப்பர் கோவில், திருப்பரிதிநியமம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் ரயில் நிலையத்திற்கு தென்மேற்கே 13 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது பரிதியப்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மாரியம்மன் கோயில் வழியாகவும், மன்னார்குடி சாலை சடையார் கோயில் வழியாகவும் செல்லும் நகரப்பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன.
சுவாமி : பாஸ்கரேசுவரர், பரிதியப்பர்
அம்பிகை : மங்களாம்பிகை, மங்கள நாயகி
தலமரம் : அரசமரம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், வேத தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. பருதி (சூரியன்) வழிபட்டுப் பிணி நீங்கிய தலம். இங்குள்ள முருகப் பெருமான் சந்நிதி வரம் தரும் மூர்த்தியாகச் சிறப்புத் தன்மையுடன் விளங்குகின்றது. இங்கு விநாயகர், முருகர், கஜலட்சுமி, நடராஜர்சபை, பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.
மூலவர் சுயம்பு மூர்த்தம். மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும். அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். சண்டேசுவரர் சந்நிதியில் 3 திருமேனிகள் உள்ளன. சூரியன் வழிபட்ட ஏழு தலங்களுள் இதுவும் ஒன்று. மற்றவை திருக்கண்டியூர், வேதிக்குடி, குடந்தை கீழ்கோட்டம், தெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், நெல்லிக்கா ஆகியன ஆகும்.
தலவரலாறு : சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல் அவரை நிந்தனை செய்து தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டதால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இத்தலத்தில் சூரியனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது. மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம் சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார். பங்குனி மாதம் 17, 18, 19 ஆகிய தினங்களில் சூரியகதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கியுள்ள இந்த ஆலயம் இரண்டு கோபுரங்களுடன் விளங்குகிறது. இராஜகோபுரம் 5 நிலைகளையும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் நேரே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உட் பிரகாரம் அடைந்தால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார். துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் மூலவர் பரிதியப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம், அதையடுத்து மூலவரை நோக்கியபடி சூரியன் இருப்பதைக் காணலாம். சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம், வேத தீர்த்தம் கோவிலின் பின்புறமும் உள்ளன. தலமரம் அரசமரம்.
எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் பகல் 12 ணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சாலியமங்கலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை