திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது ஆப்புடையார் கோயில் என வழங்கப்படுகிறது. மதுரைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் வைகையாற்றின் வடகரையில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பேருந்துகள் செல்கின்றன. மதுரை நகரின் ஒருபகுதியான சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றை கடந்து சென்றும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : ஆப்புடையார், ரிஷபுரெசர், அன்ன விநோதர்.
அம்பிகை : குரவங்கமழ் குழலி
தீர்த்தம் : இடப தீர்;த்தம், வைகை நதி
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம்.
இத்திருத்தலம் சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னன் பொருட்டு சிவபெருமான் ஆப்பினிடத்து தோன்றியமையால் ஆப்புடையார் எனப்பட்டது. இங்கு நடராஜர், சிவகாமி இவர்களின் உருவச்சிலையும், செப்புச்சிலையும் உள்ளது. சிவ வேதியர் ஒருவருக்கு வைகையாற்று மணலை அன்னமாக்கிய சிறப்பால் அன்ன விநோதர் எனப்படுகிறது. இத்தலத்தில் விநாயகர், முருகர், பிட்சாடனர், நடராஜர், நால்வர், காசி விசுவநாதர், பஞ்சலிங்கம், பழனியாண்டவர், பைரவர், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன.
சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை(சுயம்புலிங்கத்தை)க் கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அவனே குரவங்குமழ் குழலம்மையைப் பிரதிஷ்டை செய்தவன். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் கட்டுவித்துள்ளான்.
இத்தல இறைவனார், சிவபக்தர் ஒருவருக்காக மணலை அன்னமாக்கியதால் அன்னவிநோதர் என அழைக்கப்பட்டார்.
நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே ஒருமுறை பிரளயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்ற மலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையையும் திருப்பரங்குன்ற மலையையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.
மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமி உருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது.
தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும். அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம். இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.
இதுபோன்றே, கடல் அலையால் அரிந்து வரப்பட்ட பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று, மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது. இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.
இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது. இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும் பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது. இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது. யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம். இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.
ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ள பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.
விமானதளம் : மதுரை
ரயில் நிலையம் : மதுரை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு