1.திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி-விழுப்புரம் கார்டுலைனில் உள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் காவிரி-கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்திருப்பதுமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.
மூலவர் : ஸ்ரீரெங்கநாதர்-புஜங்கசயனம் தெற்கே திருமுக மண்டலம்.
தாயார் : ஸ்ரீரெங்கநாயகி (ரங்க நாச்சியார்)
தல தீர்த்தம் : சந்திரபுஷ்கரிணி காவேரி கொள்ளிடம் மற்றும் 8 தீர்த்தங்கள்
விமானம் : ப்ரணவாக்ருதி விமானம்
ப்ரத்யக்ஷம் : தர்மவர்மா காவேரி விபீஷணன் சந்திரன்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 31 பாசுரங்கள், ஸ்ரீ ஆண்டாள் - 10 பாசுரங்கள், குலசேகர ஆழ்வார் - 31 பாசுரங்கள் திருமழிசையாழ்வார் - 14 பாசுரங்கள், தொண்டரடிபொடியாழ்வார் - 55 பாசுரங்கள் திருப்பாண்ஆழ்வார் - 10 பாசுரங்கள, திருமங்கையாழ்வார் - 72 பாசுரங்கள், பொய்கையாழ்வார் - 1 பாசுரங்கள்,பூதத்தாழ்வார் 4 பாசுரங்கள், பேயாழ்வார் - 2 பாசுரங்கள், நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : திருமாலின் 108 திவ்ய தேசங்களில் தலையாயதும் சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானதும் சுயம்வியக்த திருத்தலங்களில் ஒன்றும் திருவரங்கம் ஆகும். தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் என்று சிறப்பித்து போற்றும் புகழ்பெற்ற தலமாகும். வேறெங்கும் இல்லாத ஸ்ரீதன்வந்திரி பகவானின் தனி சந்நிதி இங்கு உள்ளது. இந்த தலத்தை புலோக வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். ஸ்ரீரங்கநாதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது தங்க விமானத்தையும் பரவாஸுதேவரையும் சேவிக்கும் வழக்கம் உள்ளது.
இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தினமும் சத்திய லோகம் எனப்படும் பிரம்மலோகத்தில் பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்ட திருவாராதனர் பெருமாள் ஆவார். இத்திவ்ய ரெங்கநாதர் விக்கரகம் இராமர் விபீடணனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அழகான மாப்பிள்ளைத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டாளையும் உறையுர் கமலவல்லி நாச்சியாரையும் இங்கே ஏற்றுக்கொண்டார். கம்பர் உலகு போற்றும் கம்பராமாயணத்தை இயற்றியதும் இங்குதான். ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோர் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பாடப் பெற்ற திவ்யதேசமாகும். வடக்குப் பக்கப் பரமபத வாசலில் விரஜா நதி இருப்பதாக ஐதீகம்.
லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும். மதுரகவி ஆழ்வாரை தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும். கவிசக்கரவர்த்தி கம்பர், கம்பர் இராமாயனத்தை இத்தலத்தில் தாயார் சன்னதிக்கு அருகில் தான் அரங்கேற்றினார்.
ஸ்ரீவைஷ்ணவத்தின் ஆதாரத் தூணாகிய உடையவர் எம்பெருமானார் ஸ்ரீராமானுசரும், இன்னும் பல அடியார்களும் இத்திருத்தலத்தினை மையமாகக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பியுள்ளார்கள். முதன்மை பெற்ற இத்திருத்தலத்தை ஆழ்வார் பெருமக்களும், ஆச்சார்யார்கள், பகவத் பாகவதர்கள் மற்றும் சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள மற்றும் விஜயநகர முதலான மன்னர் மரபினர், அடியவர்கள் என பல வகையினரும் பரவி போற்றியுள்ளனர்.
ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை, ஸ்ரீரங்க மாகாத்மியம், ஸ்ரீ குண ரத்ன கோசம், ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் முதலிய நுல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னமே தோன்றிய சந்திர புஷ்கரணி என்னும் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. 156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும் உள்ளடக்கிய புராதன ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பங்குனி மாதம் கற்புர சேவை காலை முதலில் மட்டும் ஸ்ரீ ரங்கநாதருக்கு தீபாராதனை காட்டுவது விசேஷமாகும். ஒரு மாமன்னன் நெடுந்தொலைவிலிருந்து இந்த பங்குனி மாத கற்பூர சேவையை தரிசிக்க நேரம் கடந்து வந்தமையால் அவரால் தரிசிக்கமுடியவில்லை. எனினும் மீண்டும் ஒருமுறை இந்த சேவையை செய்ய கேட்டுக்கொண்டார். அவர்கள் மறுக்கவே ஓராண்டுகாலம் இத்தலத்தில் தங்கி பங்குனி மாத கற்பூர சேவையை தரிசித்து சென்றார்.
விபீஷ்ணனும் மிக்க மகிழ்ச்சியோடு இவ்விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில், காவேரி நதிக்கரையில் சந்திர புஷகரணிக்கருகில் இவ்விமானத்தை கீழே இறக்கி மாலை வேலை சந்தி கடன்களை செய்ய சென்றார். மீண்டும் வந்து விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல தூக்க முயன்ற போது, அவரால் அசைக்க முடியவில்லை. விபீஷ்ணன் மிகவும் மனம் வருந்தி ஸ்ரீ ரங்கநாதரை வேண்டினார். ரங்கநாதரோ அசரீரியாக யாம் காவேரி கரையிலேயே தங்க விரும்புவதாக கூறினார். யாம் எப்போதும் உனது இலங்கை நோக்கியே காட்சி தருவோம் என்று கூறினார். அதன் படியே அன்றிலிருந்து ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியே அருள் பாலிக்கிறார். தர்மவர்மசோழன் முதன் முதலில் இப்பெருமாளுக்கு சிறு கோவிலை கட்டினார். அதன் பிறகு பல அரசர்களின் முயற்சியால், இப்பிரம்மண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத என்ற சித்தாந்தத்தை நாடு முழுக்க பரப்பினர். ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி வசந்த மண்டபத்தில் இப்பொழுதும் நாம் காணலாம். அவருடைய பூத உடல் கெடாதவாறு இருக்க மூலிகை சாந்து பூசி வைத்திருகிறார்கள்.
கோவில் அமைப்பு : கோபுரம் ஆசிய துணை கண்டத்திலேயே மிகப்பெரிய கோபுரம் ஆகும். இக்கோபுரத்தை கட்டி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. பதிமூன்று அடுக்குகளுடன் கூடிய இக்கோபுரம் 236 அடி உயரம் ஆகும். இக்கோபுரம் ஏழு பெரிய சுவர்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சுவர்களும் ஏழு உலகமாக கருதப்படுகிறது. இதன் வெளிச்சுவரான ஏழாவது சுவரின் நீளம் 3072 அடியும் அகலம் 2521 அடியும் உள்ளது. இந்த 7 பிரகாரங்களுக்கு ஏழு திருவீதிகள் உள்ளன. 7-வது திருவீதி சித்திரை திருவீதி என்று அழைக்கப்படுகிறது. 6-வது திருவீதியில் உள்ள 6-வது பிரகாரம் திருவிக்கிரமன் திருவீதி என்றும் 5-வது பிரகாரம் அகலங்கன் திருவீதி என்றும் 4-வது பிரகாரம் ஆலிநாதன் திருவீதி என்றும் 3-வது திருவீதியில் உள்ள 3-வது பிரகாரம் குலசேகரன் திருவீதி என்றும் 2-வது திருவீதியில் உள்ள 2-வது பிரகாரம் ராஜ மகேந்திரன் என்றும் 1-வது திருவீதியில் உள்ள 1-வது பிரகாரம் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை செய்வதால் இது தர்ம வர்மன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது. சக்கரத்தாழ்வார் சன்னதி, உடையாழ்வார் (ராமானுஜர் சன்னதி), கருடாழ்வார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, ஹைகிரிவர் சன்னதி உள்ளது.
இராஜகோபுரம் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முதலில் தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான். அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
காலை 6.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி, ஸ்ரீரங்கம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு