திருக்கண்டியூர், ஹரசாப விமோசன பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சையிலிருந்து தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
மூலவர் : ஹரசாப விமோசன பெருமாள், பலிநாதன், கமலநாதன், ப்ருகுநாதன்
உத்சவர் : கமலநாதன்
தாயார் : கமலவல்லி
தீர்த்தம் : கபால மோக்ஷபுஷ்கரிணி, பத்ம தீர்த்தம், கபால தீர்த்தம், குடமுருட்டி நதி
மங்களாசாசனம் : திருமங்கைஆழ்வார் - 1 பாசுரம்
விமானம் : கமலக்குறுத்தி விமானம்
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். இங்கு பிரம்மா சிவன் விஷ்ணு ஆகியோருக்குத் தனி கோயில்கள் அருகில் இருக்கின்றன. ஆதலால் இத்தலம் மும்மூர்த்தி சேத்திரம் என பெயர் பெற்றது. திருக்கரம்பனூரில் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பட்ட பிறகும் தன் கையை விட்டு கபாலம் நீங்காததால் அவ்விடத்திலிருந்தே பெருமாளை வணங்கினார். பெருமாள் தன்னைக் கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரோடு தன்னை வணங்கினால் கபாலம் நீங்கப்பெறும் எனக் கூறினார். அவ்வண்ணமே கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் சிவன் நீராடி எழுந்ததும் கபாலம் அகன்றது. இவ்வாறு ஹரன் சாபம் தீர்ந்ததால் 'ஹரசாப விமோசனப் பெருமாள்' எனப்பெயர் உண்டாயிற்று இத்தலம் பஞ்சகமல சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. கமலா சேத்திரம். கமலா புஷ்கரிணி கமல விமானம் கமலநாதன் கமலவல்லி நாச்சியார் ஆகியவை ஐந்து கமலங்கள் ஆகும். நினைத்த காரியத்தை நிறைவேறச் செய்யும் வரப்பிரசாத வடிவமான மகாசுதர்சனநரசிம்மன் சிலை அழகிலும். அருளிலும் பொலிவுற்றுத் திகிழ்கின்றது.
இத்தலத்தைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் எட்டு அத்தியாயங்களிலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும், திருமுறைகளிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாயிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாயிலும் காணக் கிடைக்கிறது. சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
தல வரலாறு : இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டாதால் "கண்டீஸ்வரர்” எனப் பெயர் பெற்றது. இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திக்கும் தனித்தனியே ஆலயம் அமைந்த ஒரே ஊர் திருக்கண்டியூராகும். எனவே இத்திருத்தலம் திரிமூர்த்தி தலம் என்று அழைக்கப்படுகிறது. திருத்தலத்திற்க்கு கமலாரண்யம், கண்டனஷேத்திரம், திரிமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயர்கள் உள்ளது. தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்பட்டதால் கமலாரண்யம் என்றும் மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைந்து உள்ளதால் திருமூர்த்தி ஷேத்திரம் என்றும், தலத்தை நினைத்தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்தும் கழிவதால் கண்டன ஷேத்திரம் என்றும் பெயர் ஏற்பட்டது.
ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் கூடிய இக்கோயில், கி பி எட்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு விஜய நகரப் பேரரசர்களும் தஞ்சாவூர் நாயக்கர்களும் திருப்பணி செய்தனர். பிரம்மா, சிவன் மற்றும் மகாபலி சக்கரவர்த்திக்குக் காட்சி அளித்தவர் ஹர சாப விமோசனப் பெருமாள். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை