நீலமேகப் பெருமாள், திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூர் மாநகரின் வடக்கே 4 கி.மீ தொலைவில் உள்ள வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்தலம். கும்பகோணம் - தஞ்சாவூர் பஸ்ஸில் வரும்போது தஞ்சை ஊர் எல்லையில் வெண்ணாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம். தஞ்சையிலிருந்தும் பஸ்ஸில் வரலாம். மூன்று திருத்தலங்கள் அருகருகே அமைந்து ஒரே திவ்யதேசப் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றன.
1. தஞ்சை மாமணிக்கோயில்
மூலவர் : நீலமேகப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர் : ஸ்ரீமந்நாராயணர்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : அம்ருத தீர்த்தம், கன்னிகாபுஷ்கரிணி, வெண்ணாறு
தலவிருட்சம்: மகிழம் மரம்
விமானம் : ஸௌந்தர்ய விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் -3 பாசுரங்கள், பூதத்தாழ்வார் - 1, நம்மாழ்வார் - 1
2. மணிக்குன்றம்
மூலவர் : மணக்குன்றம. வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : அம்புஜவல்லி
தீர்த்தம் : ஸ்ரீராமதீர்த்தம்
விமானம் : மணிக்கூட விமானம்
3. தஞ்சையாளி நகர்
மூலவர் : நரசிம்மன் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : தஞ்சைநாயகி
தீர்த்தம் : சூர்ய புஷ்கரிணி, ஸ்ரீராமதீர்த்தம்
விமானம் : வேதஸுந்தர விமானம்
பாடியோர் : பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்
தலச் சிறப்புகள் : வெண்ணாற்றங்கரையில் மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமாள்கள் எழுந்தருளியுள்ளனர். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்ய தேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. "என் அண்ணலாகிய எம்பிரானின் நாமமாகிய நாராயணா என்னும் நாமமே நான் கடைத்தேறக் கண்டுகொண்ட நாமம்" என்று திருமங்கை ஆழ்வரால் பாடப்பட்ட திருத்தலம் இது.
தல வரலாறு : திரேதா யுகத்தில் தஞ்சகன், தண்டகன், தாடகன் என்று மூன்று அசுரர்கள் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து அவரால் எந்தத் துன்பமும் ஏற்படாத வரம் பெற்றனர். இதனால் கர்வம் கொண்டு அனைத்து முனிவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தார்கள். பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை மணிமுத்தா நதியில் விட்டு, பராசரர் முனிவர் பசுமையான வெண்ணாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து ஹரிநாமத்தை ஜபித்து தவம் செய்து வந்தார். அரக்கர்கள் முனிவருக்கு தொல்லை கொடுத்து, தவத்தைக் கலைத்து அந்த இடத்தை விட்டு விரட்ட நினைத்தனர். பராசரர் அவர்களிடம் தவறை எண்ணித் திருந்துமாறு அறிவுரை கூறினார். அரக்கர்கள் பராசரர் முனிவரின் அறிவுரையை ஏற்க மறுத்தனர். எனவே பராசரர் முனிவர் பெருமாளின் உதவியை நாடினார்.
பெருமாள் பக்தரைக் காக்கக் கருடனுடன் விரைந்து வந்தார். தஞ்சகன் யானை வடிவில் "கஜமுகனாக" தோன்றி பெருமாளிடம் போரிட்டான். பெருமாள் நரசிம்மயாளி வடிவில் தோன்றி தம் சக்ராயுதத்தால் தஞ்சகனைத் தோற்கடித்தார். தஞ்சகன் சரணடைந்தான். இந்த சம்பவத்தை நினைவூட்டும் விதமாக இந்த இடம் தஞ்சகனூர் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் தஞ்சகனூர் தஞ்சாவூர் என்று மருவியது. பெருமாள் நரசிம்மயாழி வடிவில் வந்ததால் இவ்விடம் தஞ்சையாழி என்றும் அழைக்கப்படுகிறது.
அதன் பின்னர் தண்டகன் தண்டகாரண்யத்தில் வராஹ அவதார மூர்த்தியாலும் தாடகன் கிருஷ்ணாவதாரத்தின் போது காளி தேவியாலும் வதம் செய்யப்பட்டனர். அரக்கர்களை அழித்தபின் பெருமாள், பராசர முனிவருக்கு நீலமேகப் பெருமாளாக காட்சியளித்தார். பக்தருக்கு அபயம் தந்த பெருமாள் இவ்விடத்தில் வெண்ணாற்றங்கரையில் மூன்று கோவில்களில் அருள்பாலிக்கிறார். செங்கமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவில், அம்புஜவல்லித் தாயார் சமேத ஸ்ரீ மணி குன்றப் பெருமாள் கோயில், தஞ்சைநாயகித் தாயார் சமேத வீரநரசிம்மர் திருக்கோவில் ஆகும்.
இத்திருதலம் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருகோவில்களில் ஒன்றாகும். மேலசிங்கப்பெருமாள், நீலமேகப்பெருமாள், மணிகுன்றப் பெருமாள் ஆகியவை மாமணி கோவில்கள், என்றழைக்கப்படுகின்றன. இத்தலம் பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட திருக்கோவில். பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்த திருத்தலம். அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோவிலில் இறைவன் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அருள்மிகு மணிக்குன்றப் பெருமாள் கோவிலில் இறைவன் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வீரநரசிம்ம பெருமாள் கோவிலில் இறைவன் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிங்கப்பெருமாள் கோவில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இந்த திவ்ய தேசத்தில் பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர்.
வீரநரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழ்வாராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்த நிலையில் இருக்க, இடப்புறத்தில் சுவாமியை வணங்கியது போன்ற சிலை அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி பெருமாளை வணங்குவதாகவும் கூறப்படுகிறது. இவரின் பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் உள்ளனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோவிலில் பிரகாரத்தில் நரசிம்மரின் வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். இந்த நரசிம்மர் "வலவந்தை நரசிம்மர்”என அழைக்கப்படுகிறார். அசுரனை அழித்த நரசிம்மர், கோபம் தணியாமல் இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை என்பதால் மகாலட்சுமி நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். அதிகமாக கோபப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி மன அமைதி பெறலாம் என்பது நம்பிக்கை.
அசுரர்களை அழித்த பெருமாள் நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோவில்களில் அருள்பாலிக்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோவில்கள் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே நடைபெறுகிறது. நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து சாந்தமான திருகோலத்தில் காட்சி தருவது சிறப்பு ஆகும். இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.
வீரநரசிம்ம பெருமாள் கோவில் காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையில் திறந்திருக்கும். மற்ற இரண்டு கோவில்களுக்கு செல்ல இங்கிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்ல வேண்டும். பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் தொடர்ந்து பிரம்மோற்ஸவங்கள் நடைபெறும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை