நவமோகன கிருஷ்ணன், ஆயர்பாடி (திருவாய்ப்பாடி)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : நவமோஹன கிருஷ்ணன்
தாயார் : ருக்மணி, சத்யபாமா
தீர்த்தம் : யமுனா நதி
விமானம் : ஹேமகூட விமானம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 10 பாசுரங்கள், ஆண்டாள் - 5 பாசுரங்கள், திருமங்கையாழ்வார்- 7 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். கண்ணன் வெண்ணெய் உண்டு விளையாடித் திரிந்த இடம். கண்ணன் மண்ணைத் தின்னும் போது யசோதை வாயைத் திறந்து காட்டச் சொன்னதும், உலகத்தை காட்டிய இடம், பூதனையின் முலை உண்டு அவள் உயிர் பிரிந்த இடம். நந்தகோபாலனாக வளர்ந்து மாடு மேய்த்து பலவித லீலைகளை நடத்திய இடம் கண்ணனின் பல பருவ நிகழ்ச்சி நடந்தது, இந்த கோகுலததில்தான். ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
தல வரலாறு : இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. இந்து தொன்மப்படி துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
மகாகவி சூர்தாஸ், வல்லபாசார்யரின் மாணவர். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர். அவர் கோகுலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனின் பெருமைகளைக் கேள்விப்பட்டதும், அங்கே செல்ல வேண்டுமென்று விரும்பினார். கண்ணனை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் கண்ணனாவது தன்னைப் பார்ப்பானே என்ற முழு நம்பிக்கையில் தன்னை அங்கு அழைத்துச் செல்லும்படி உறவினர்களை வற்புறுத்தினார். அவர்களும் அவரை அந்தக் கோயிலுக்குள் அழைத்துச்சென்று பகவான் கிருஷ்ணனின் விக்ரகத்தின் முன் நிறுத்தினார்கள். கிருஷ்ணன் முன் நின்ற சூர்தாஸ் கவிபாட ஆரம்பித்தார். தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். கிருஷ்ணனின் அரு ளால் அவரது பார்வைக் குறை நீங்கியது. தெய்விக ஒளி அவருக்குப் பார்வையைத் தந்தது என்பது வரலாறு. கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெயும் அவலும் இங்கே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பானது.