அண்ணன் பெருமாள், திருவெள்ளக்குளம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூர், சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
உற்சவர் : சீனிவாசன்
தாயார்: அலர்மேல் மங்கை
உற்சவர் தாயார்: பூவார் திருமகள், பத்மாவதி
தல விருட்சம்: வில்வம், பரசு
தீர்த்தம்: வெள்ளக்குள தீர்த்தம், ஸ்வேத புஷ்கரணி
விமானம் : தத்வத்யோக விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : இப்பதியை 'தென் திருப்பதி' என்றும் அழைப்பர். இங்கே திருப்பதி போல் தலைமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இக்கோயிலில் கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர். இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார். திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. திருமங்கையாழ்வார் இத்தலத்து இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் இது அண்ணன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு : ஒரு சமயம் சூரிய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு ஒன்பதாவது வயதில் மரணகண்டம் என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும், அதற்கு பிராயச்சித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுக, அவரோ இவ்விடத்திற்குச் சென்று தவம் செய்யக் கூறினார். எனவே இவ்விடம் வந்த சுவேதன், மருத்த முனிவர் ஆசிரமம் சென்று ஆயுள் விருத்தி மந்திரத்தை பயிற்சி பெற்று, இங்குக் கடுந்தவம் இயற்றினார். இதைக் கண்ட மகாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல் நீண்ட ஆயுளை நல்கினார். ஆதலால் இத்தலத்தின் எதிர்புறம் அமைந்துள்ள சுவேத புஷ்கரிணி திருவெள்ளக்குளம் என்ற பெயர் பெற்றது. இந்த சுவேத புஷ்கரிணியில் உள்ள குமுத மலர்களை கொய்து செல்லத் தேவகுலப் பெண்கள் வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத் தான் திருமங்iகாழ்வாருக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டது. இங்கு குமுத வல்லிக்கு ஒரு தனிச் சந்நிதி உள்ளது.
மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் “அண்ணா’ என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை “அண்ணா’ என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு “அண்ணன்’ ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் “அண்ணன் பெருமாள்’ என்றும் இத்தலம் “அண்ணன் கோயில்’ என்றும் வழங்கப்படுகிறது.
ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து “திரு’ மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் “திருமங்கை ஆழ்வார்’ என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருப்பதியைப்போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம். ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம். மிகப்பெரிய பிரார்த்தனை ஸ்தலமான இங்கு அறுபது, எழுபது, எண்பதாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். திருமண தடை நீங்கவும், எம பயம் நீங்கவும் இங்கு துலாபாரம் காணிக்கை கொடுக்கிறார்கள்.
காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை சேவிக்கலாம், மேலும் அர்ச்சகர் வீடு கோயிலின் அருகில் உள்ளது.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு