திருக்குறளப்பன், திருவாறன்விளை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையம் மாவட்டத்தில் செங்கண்ணூரிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது பார்த்தசாரதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : திருக்குறளப்பன் (சேடாசனர்)
தாயார் : பத்மாசநி நாச்சியார்
தீர்த்தம் : வேதவ்யாஸ ஸரஸ், பம்பா தீர்த்தம்
விமானம் : வாமன விமானம்
மங்களாசாசனம் : 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் அர்ஜுனனர் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலை உள்ளது. இதற்கு தற்போது தங்கக்கவசம் சாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆதலால் இத்தலம் 'அர்சுனன் அம்பலம்' என்று அழைக்கப்படுகிறது. பம்பைக் கரையில் கோயில் உள்ளது. கேரளாவின் புகழ் பெற்ற பம்பை நதி இக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக செல்கிறது. பரசுராமருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. இவரை வேதவியாசர், பிரம்மா ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். ஒரு முறை பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்து சென்றனர். வேதங்களை மீட்டுத்தரும்படி பிரம்மா பெருமாளை வேண்டினார். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத்தந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர். இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள்.
தல வரலாறு : பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான் கர்ணன். அந்த நேரத்தில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்பெய்தியதால் இறந்து போனான். இவ்வாறு ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த கர்ணனை கொன்றது அர்ஜுனனுக்கு நியாயமாக படவில்லை. யுத்த தர்மத்தின்படி இது பெரும் பாவம் என்றும், அதிலும் தன் போன்றோர் செய்யத்தகாத காரியமென்றும் பெரிதும் வருந்தினான் அர்ஜுனன். பஞ்ச பாண்டவர்கள் ஒரு முறை கேரள பகுதிக்கு வந்த போது, ஒவ்வொருவரும் ஒரு பெருமாள் தலத்தை புதுப்பித்து வழிபாடு செய்தனர். இதில் அர்ஜுனன் இத்தலத்தை புதுப்பித்து வழிபாடு செய்ததாகவும், இத்தலத்தின் அருகில் இருந்த வன்னி மரத்தில் தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் புராணம் கூறுகிறது. போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால், தன் மன நிம்மதிக்காகவும், போரில் பிற உயிர்களை கொன்ற பாவம் போக்கவும் அர்ஜுனன் இத்தலத்தில் தவம் செய்ததாகவும், இவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பார்த்தசாரதியாகவே இவனுக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம். இந்த ஸ்தலத்தில்தான் சபரிமலை ஜயப்ப ஸ்வாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்த கோஷ்டியுடன் எடுத்து செல்லப்பட்டு வருகின்றன.
தைமாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும். குழந்தைகள் உடல் நிலை சரியில்லாத போது வன்னி மரக் காய்களை வாங்கி அவர்களது தலையை சுற்றி எறிந்தால், அர்ஜுனன் அம்பினால் எதிரிகள் ஓடுவது போல, நோய் விலகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கும் குருவாயூர் போல துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேற இங்கு வன்னிமரக்காய்களை துலாபாரமாக கொடுக்கிறார்கள்.
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். இங்கு வசதிகள் குறைவு என்றாலும், தேவஸ்தான சத்திரம் இருக்கிறது.
அருகிலுள்ள விமான நிலையம் : எர்ணாகுளம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கண்ணூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு