உலகளந்த பெருமாள், திருக்காரகம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்தில் இருக்கிறது. இதற்கு ‘காரகம்’ என்று பெயர்.
மூலவர் : கருணாகரப் பெருமாள்
தாயார் : பத்மாமணி நாச்சியார்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
விமானம் : வாமன விமானம், ரம்ய விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : இந்த திவ்ய தேசம் ஊரகத்தில் (பெரிய காஞ்சியில்) உட்சன்னிதியாக உள்ளது. கார்ஹமகரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து ஞானம் பெற்றதால் அவர் பெயரைக் கொண்டே இந்த திவ்ய தேசம் 'காரகம்' என்று விளங்கிற்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வாமன விமானம் எனப்படும். இத்தல இறைவன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
தல வரலாறு : கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இத்திவ்ய தேசம் "காரகம்' எனப்பட்டது என்பர். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
உலகளந்த பெருமாள் சந்நிதியில் மூன்றாவது பிரகாரத்தில் ரம்ய விமானத்தின் கீழ், வடக்கு நோக்கி ஆதிசேடன் கிழ் வீற்றிருந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இப்பெருமாள் கல்வி, அறிவு வளர அருள் கொடுப்பவர். பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108 திருப்பதியந்தாதியில், இப்பெருமாளை கல்வி மற்றும் அறிவு வளர அருள் பொழிபவர் என்கிறார். நல்ல கல்வியும் நல்லகுலமும், நல்ல புகழும் உடையவர்கள் மேலும் அதனைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென எண்ணுபவர்கள் இக்காருலகத்துப் பெருமாளை வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு