மகாமகம்- கும்பகோணம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உடைத்து விட்டார். உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர்.
மாசி மாதமன்று குரு கும்பராசியில் இருக்கும் பொழுது, மகம் நட்சத்திரமும், பூராடன நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம் மகாமகம் ஆகும். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும்.
திருத்தல சிறப்புகள்: இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன. இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.
வரலாறு : ஒவ்வொரு முறை பிரம்மதேவன் தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன் தொடர்ச்சியாகப் பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார்.
ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணியத் தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியிலுள்ள கங்கையில் நீராடினால் அகலும். காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும் என வடமொழி நூல் வலியுறுத்திக்கூறுகிறது. கும்பகோணத்திலுள்ள தீர்த்தம் மகாமக தீர்த்தம். அமுதத்தின் ஒரு பகுதி இங்கு தீர்த்தமானதால் அமுத தீர்த்தம் எனவும், பிரமன் இத் தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்ததால் பிரம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றது. மகாமகப் பெருவிழா வடபுலத்தில் நிகழும் கும்பமேளாவைப் போன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.
இது 6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் சரிவகம் வடிவில் அமைந்துள்ள குளம் ஆகும். இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. இந்த கிணற்றின் பெயர்கள் ஒன்று சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன. கி.பி.16ஆம் நூற்றாண்டில் விசயநகர மன்னர் கிருட்டிணதேவராயர் இத்தலத்திற்கு வந்து நீராடியதாக நாகலாபுரம் கல்வெட்டு குறிக்கிறது. தஞ்சாவூரை சார்ந்த ரகுநாத நாயக்கரின் படைத்தலைவர் கோவிந்த தீட்சிதர் இந்த குளத்தைச் சுற்றி 16 மண்டபங்களையும் அதனைச் சார்ந்து படிகளையும் அமைத்துள்ளார்.
16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது. இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரில் அண்மையில் உள்ளன. மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.
நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்
அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் - கும்பேஸ்வரர் கோயில்
வில்வம் விழுந்த இடம் - நாகேஸ்வரர் கோயில்
உறி விழுந்த இடம் - சோமேஸ்வரர் கோயில்
பூணூல் விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்
தேங்காய் விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்
சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்
புஷ்பங்கள் விழுந்த இடம் - கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்(இக்கோயிலின் கிணறு)
சந்தனம் விழுந்த இடம் - காளஹஸ்தீஸ்வரர் கோயில்
அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்
மகாமகத்தின்போது வைணவக் கோயில்களின் சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும். இக்கோயில்கள் அனைத்தும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன.
சார்ங்கபாணி கோயில்,சக்கரபாணி கோயில், இராமஸ்வாமி கோயில், ராஜகோபாலஸ்வாமி கோயில் , வராகப்பெருமாள் கோயில்
இந்தக் குளத்தில் 20 தீர்த்தங்கள் உள்ளன. வாயு, கங்கா , பிரம்ம , யமுனை , குபேர, கோதாவரி, ஈசானிய, நர்மதை , இந்திர, சரஸ்வதி, அக்னி, காவேரி , யம, குமரி, நிருதி, கிருஷ்ணா, தேவ, வருண, சரயு, கன்னிகா தீர்த்தம். (கன்னிகா தீர்த்தத்தில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளன). 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது வருவது மகாமகம் ஆகும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் எல்லா உலகத்தில் உள்ள தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம்.
மாசிமகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடி எழுந்ததும் 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத்துணி கொடுப்பது சிறப்பான பலனை தரும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு