திருக்கண்ணங்குடி- லோகநாதப் பெருமாள் கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கி. மீ தொலைவிலும் சிக்கலில் இருந்து 2 கி.மீ தூரத்திலும் இந்தக் கோவில் உள்ளது. இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும்.
மூலவர் : லோகநாதப் பெருமாள்
உற்சவர் : தாமோதர பெருமாள், அரவிந்தவல்லி
தாயார் : லோகநாயகி
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தங்கள் : ராவண புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்
கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களாக திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகியவை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
தல சிறப்புகள் : இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு இவர் சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். கருடன் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார். தாயார் சன்னதியிலுள்ள மூலவரும், உற்சவரும் ஒரே ஜாடையில் இருப்பது, வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத அதிசயம். கோவிலுக்குள் எட்டு தீர்த்தக் கிணறு உண்டு. பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும்.
கோவில் அமைப்பு : பரந்த வளாகத்தில் 5 அடுக்கு இராஜ கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபமும் ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் என்று இந்த ஐந்தும் கொண்டு மிகவும் அற்புதமாக அமைந்த தலம் என்பதால் பஞ்ச கிருஷ்ண சேத்திரம் என்று பெரிதும் போற்றப்படுகிறது.
தல வரலாறு : வசிஷ்ட முனிவர் வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர். ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது. கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் “கண்ணங்குடி’ ஆனது. ஒரு சமயம் திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்யும் பொருட்டு நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான ஒரு புத்த விவரத்தை எடுத்து வந்தார். நள்ளிரவில் ஓய்வெடுக்க விரும்பிய பொழுது, இத்தலத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் புதைத்துவிட்டு நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்க விடாமல் இந்த விவரத்தை பார்த்துக்கொள் என்று புளிய மரத்தைப் பார்த்து சொன்னார். புளிய மரமும், திருமங்கையாழ்வார் சொன்னபடி கேட்டு உறங்காமல் அந்த விவரத்தை காத்தது. அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு 'உறங்காப் புளிய மரம்' என்ற பெயரும் உண்டு. இன்னொரு அதிசயம் இங்குள்ள கிணறுகளில் தண்ணீரை தென்படுவதில்லை. இந்த ஊரில் என்ன வழக்கு நடந்தாலும் அது இன்றுவரை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது
வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். இத்தலத்தின் கல்லிலும் மண்ணிலும்கூட கிருஷ்ண சாந்நித்யம் நிரம்பியிருக்கின்றன என்பார்கள்.
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, மதுரை, திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கீழ்வேளூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு