பத்துமலை, கோலாம்பூர்
திருத்தல அமைவிடம் : மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. மலேசியாவில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில் இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தல சிறப்புகள் : ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது.
பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முருகக் கடவுள் சூரவதம் செய்யும் காட்சிகள் அருங்கலை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பத்துமலையின் இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் சிலையைக் காண முடியும். இராமாயண குகையில் இராமரின் வாழ்க்கைத் தத்துவங்கள் அழகான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே உயரமான 140அடி முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது. இங்குள்ள பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும் மதப்பாகுபாடின்றி அனைவரும் வந்து வணங்கும் கோயிலாக உள்ளது. 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இதை தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
தல வரலாறு : பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் மலேசியாவில் கூலித் தொழிலாளர்களாக பணிசெய்து வந்தனர். அப்போது தொழிலாளர்களின் தலைவராக இருந்தவர் காயாரோகணம் பிள்ளை. இவரது முயற்சியால் கோலாலம்பூரில் 1873 மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. ஒருநாள் கனவில் தோன்றிய அம்பிகை என் இளைய மகன் முருகனுக்கு அந்த மலைக் குகையில் கோயில் கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமி பிள்ளை, கண்ணப்பதேவர் என்பவர் இணைந்து காடாகக் கிடந்த பத்துமலையில் 1888இல் வேல் ஒன்றிணை வைத்து வழிபடத் தொடங்கினார். மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலய ங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.
கோயில் அமைப்பு : கோயிலில் நுழைந்தவுடன் விநாயகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மீனாட்சி, சொக்கநாதர், வேலாயுதமூர்த்தி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை முருகன் சந்நிதிகள் உள்ளன. பிரதான சந்நிதியாக சுண்ணாம்புப்பாறைகளுக்கு நடுவில் உள்ள குகையில் முருகப்பெருமான் வள்ளிதெய்வானையுடன் வீற்றிருக்கிறார் மிகப் பெரிய முருகன் சிலை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கீதோபதேச காட்சி, விநாயகர், அவ்வை, சிதம்பரம் நடராஜர் உள்ளன. இடதுபுறம் இந்தப் பத்துமலை முருகனை ஸ்தாபித்த பெரியவர் கே. தம்புசாமி பிள்ளை அவர்கள், மார்பளவு சிலைஉள்ளன. இவருக்கு இடப்புறம் தனி சந்நதியில் மீனாட்சி அம்மன் அருள் பாலிக்கிறாள். ஒரு தனி மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணக் காட்சி சுதை சிற்பமாக, அழகிய வண்ணங்களுடன், உயிரோட்டம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. வலதுபக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி-சுந்தரேஸ்வரர், சிவன்-பார்வதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், மாரியம்மன் ஆகியோரின் ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலைகளை வரிசையாக ஒரு மண்டபத்தின் மேல் உள்ளது. மண்டபத்துக்குக் கீழே, பத்தடி உயரத் தோற்றத்தில் ஐம்பொன் நடராஜர், தில்லை அம்பலத்தானை நினைவுறுத்துகிறார்.
பக்கத்தில் அமைந்துள்ள 29 படிகளைக் கடந்து மேலே சென்றால், நமக்காக ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அந்த மண்டபத்துக்குள்ளேயே ஒரு சிறு நந்தி அவர்முன் வீற்றிருக்கிறது. அதற்குப் பின்னால் சுற்றுச் சுவருக்கு வெளியே மிகப் பெரிய நந்தி ஒன்றும் கம்பீரத்துடன் உள்ளது. கோஷ்டத்தின் தெற்கே ஸ்ரீஸ்தல கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். கணேசர் ஆலயத்துக்குப் பின்னால் உள்ள அரசமரத்தையும் வலம் வரலாம். அந்த மரத்தடியில் கணேசர், நாகராஜர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். உள்ளே இடது பக்கத்தில் இடும்பன் சந்நதி. அடுத்து 32 படிகள் கீழே இறங்கவேண்டும் வலப்புறம் பழநி ஆண்டவன் சந்நதி. இந்தப் பழநி முருகன், கோயில் கொண்டிருப்பது என்னவோ சிறு சந்நதியில்தான். ஆனால் மேலே மிகப் பெரியதான சுதைச்சிலையாக அவன் நின்று ஆசிர்வதிக்கிறான். மீண்டும் 5 படி இறங்கினால் பால்குட மண்டபத்தைக் காணலாம். முருகன் அபிஷேகத்துக்காகப் பால்குடம் எடுப்பதாக வேண்டிக்கொள்பவர்கள் தாம் கொண்டுவரும் குடங்களை இங்கே வைத்து சில அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு பிறகு முருகன் சந்நதியில் சேர்ப்பிக்கிறார்கள். இந்த பிரமாண்ட முருகனுக்கு இடது பக்கத்தில் சனிபகவானுக்குத் தனிச் சந்நதி உள்ளது. அவருக்கு முன்னால் நவகிரகங்கள் ஒரே தொகுதியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்நதி மண்டபத்தின் வலப்பக்கம் மௌனகுரு சித்தர் பீடம் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தர் மௌனகுருவைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு சிறு கோயில் அமைத்திருக்கிறார்கள். அவரது பீடத்துக்கு மேலே சிறு லிங்கம் ஒன்று உள்ளது. திருமாலுக்கும் இங்கே ஒரு கோயில் இருக்கிறது. சற்றுத் தொலைவில் ரயில்நிலையம் போகும் வெளிவாசலுக்கு முன்னால் வெங்கடாசலபதிப் பெருமாள், தனி வளாகத்தில் கோயில்கொண்டிருக்கிறார். அவருக்கு வலப்புறம் அலர்மேல் மங்கைத் தாயார் தனியே வீற்றிருக்கிறார். பெருமாளுக்கு நேர் எதிரே கருடன் சேவை சாதிக்கிறார். வெங்கடாசலபதி கோயிலுக்குப் பின்னால் பச்சை வண்ண மேனியனாக ஆஞ்சநேயர் உயர்ந்து நிற்கிறார். தன் மார்பைப் பிளந்து தன் இதயத்தில் நிரந்தரமாக வீற்றிருக்கும் ராமர்-சீதையைக் காட்டுகிறார். இவை தவிர தனியே ராமாயண குகை ஒன்றும் இருக்கிறது. இதற்குள் ராமாயணக் காட்சிகள் மிகுந்த பொலிவுடன் திகழ்கின்றன.
முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத் திருவிழா 1891ம் ஆண்டு முதலே பத்துமலையில் நடத்தப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்நாளில் பத்துமலையில் கூடி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தைப்பூசத்திற்கு முதல்நாள் 21அடி உயர வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் எழுந்தருள்வார். இந்த தேர்பவனி கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை அடிவாரத்தை வந்தடையும். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உடன்வருவர். “முருகனுக்கு அரோகரா’ எங்கும் மக்கள் கோஷம் விண்ணைத் தொடும். தொடக்க காலத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இவ்விழா, ஒருவாரகாலம் தொடர்ந்து நடக்கிறது.பழங்காலத்தில் மலைமேல் இருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால், பன்னீர், சந்தனம் என்று பல்வேறு திரவியங்களைப் பக்தர்கள் காவடியில் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வழக்கமே காவடி வழிபாடாக பின்னாளில் மாறிவிட்டது.
அருகிலுள்ள விமான நிலையம் : கோலாம்பூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோலாம்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு