வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கும்பகோணத்தை அடுத்த மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர் : வைத்தியநாதர்
அம்மன் : தையல்நாயகி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்தம்
தலச் சிறப்புகள் : முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர்.
இத்திருக்கோயிலில்,தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.மாதந்தோறும் கார்த்திகைத் திருநாள்,கந்த சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் மட்டுமே ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அர்த்தஜாம பூஜையின்போது ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னரே, சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இத்தலத்தில் புழுகாப்பு தரிசனம் மிகவும் சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.செவ்வாய் மற்றும் கிருத்திகை தினங்களிலும்,உற்சவ காலங்களிலும் முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. கிருத்திகை தினங்களில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நவரத்ன கவசமும் அணிவிக்கப்படுகிறது.
இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும். தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சுமார் 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய காமிக ஆகமம் உடைய பழமை ஆலயம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 16வது தலம்.
அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும், மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர்.
இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர். இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது.நேத்திரப்பிடி சந்தனம்,திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும். இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது.இராமர் பூஜித்த தலம் இது. இத்திருக்கோவிலில் மரகத லிங்கம் இருப்பது இதன் மற்றொரு சிறப்பு. நாடி ஜோதிடர்கள் மிக அதிகமாக காணப்படுவது இந்த ஊரில் தான். இத்திருக்கோவிலில் மரகத லிங்கம் இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.
தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்ள உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்கும். வைத்தீஸ்வரன் கோவிலில் மூலவர் சந்நதிக்குள் நுழைந்தவுடன், தண்டாயுதபாணி சந்நதிக்கு தெற்கில் தெற்கு முகமாக அங்காரகன் சந்நதி. தனது நான்கு கைகளிலும் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கியபடி காட்சி தருகிறார் செவ்வாய். செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத்தலம் வந்து துவரை, அன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால் தோஷநிவர்த்தி பெற்று, மணவினை பெறலாம். இத்தல வழிபாடு கோள்வினைகள், வாதநோய், பேய், பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது.
சித்தாமிர்த தீர்த்தம்: பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் அருளும் தலமாகப் போற்றப்படும் இத்தலத்தில் 6 தீர்த்தங்கள் உள்ளன. அதில், முதன்மையானது சித்தாமிர்தத் தீர்த்தம். சதானந்த முனிவரின் சாபம் காரணமாக, இத் தீர்த்தத்தில் தவளை, பாம்புகள் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது. மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள்ளன.
காலை 5.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.0 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு