கந்தசுவாமி கோயில், மண்டூர் (சின்னக் கதிர்காமம் )
திருத்தல அமைவிடம் : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள கந்தசுவாமி கோயில் ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில்.
மூலவர் : வேல்
தல விருட்சம் : தில்லைமரம்
தல சிறப்புகள் : இங்கு குடிகொள்ளும் கந்தனது வேல் தில்லைமரத்தினிலே தானாக தோன்றியதனால் தில்லை மண்டூர் கந்தசுவாமி ஆலயம் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.இவ் ஆலயமானது தெற்கு திசைநோக்கி கதிர்காம கந்தன் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
தல வரலாறு : மண்டு மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் காரணப்பெயராகவே மண்டூர் எனும் பெயர் உருவானதாக கூறப்படுகின்றது.. கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது.இக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன. இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன.
கதிர்காமத்தில் திருவிழாவின் போதுமுருகன் ஆலயத்தில் இருந்து புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளியம்பாள் ஆலய முன் அடைந்ததும் புட்பக விமானம் அங்குள்ள மேடையில் வைக்கப்படும். கப்புகனார் (பூசகர்) அதனுள் இருக்கும் பொருளை மறைவாக வள்ளியம்பாள் ஆலயத்தினுள் எடுத்துச் சென்று பூசை செய்த பின்னர் மீண்டும் கொண்டு வந்து வைப்பார். தீர்த்தத்தின் போதும் இப்பொருளே தீர்த்தமாட மாணிக்க கங்கையுள் கொண்டு செல்லப்படுகின்றது. இதே நடைமுறை மண்டூரிலும் பின்பற்றப் படுகின்றது. இங்கு யானைக்குப் பதிலாக புட்பக விமானம் எனப்படும் தேரினுள் வைத்தே அப்பொருள் கொண்டு செல்லப்படுகின்றது. தீர்த்தத்தின் போது புட்பக விமானம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வாவிக் கரையில் உள்ள சபா மண்டபத்தை சென்றடையும். கப்புகனார் அதனுள் இருக்கும் பொருளை மட்டக்களப்பு வாவியில் சீலையால் மறைக்கப்பட்டிருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.
பல நூற்றாண்டு தொன்மை மிகுந்த ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் சடங்குகளையும், பாரம்பரியங்களையும், பூசை முறைகளையும் தனக்கென்று தனித்துவமாக வடிவமைத்துள்ளது. எனினும் இவ்வாலயத்தின் வரலாறானது அன்று முதல் இன்று வரை பலரால் பல கட்டுரைகள் வரையப்பட்டபோதும் இவ் ஆலயத்தின் தொன்மை அறியாது கட்டுரையாளர்கள் தமது கட்டுரைகளில் திண்டாடுவது ஆலயத்தின் அற்புதத்தினையும் அதன் தொன்மையினையும் பறைசாற்றுவதாகவுள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் : கொழும்பு
அருகிலுள்ள ரயில் நிலையம் : மட்டக்களப்பு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு