காட்டுமலை, கந்தசாமி கோயில்
திருத்தல அமைவிடம் : இலங்கை யாழ்ப்பாணத்திலே அச்சுவேலிப் பகுதியில் உள்ள நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது.
தல சிறப்புகள் : இக்கோவிலில் மூலமூர்த்தி சிவன் ஆக இருந்த போதிலும் ஆறுமுகப் பெருமானுக்கே சிறப்பிடம் தரப்பட்டது. சுற்றுப்புறத்தில் விநாயகரும்,அம்மையும்,வைரவர்,காளி,பழனி ஆண்டவர் முதலிய பரிவார மூர்த்திகளும் வீற்றிருக்கின்றனர். காட்டுமலை கந்தசாமி கோயில் அருளாளர் சீனியர் அவர்களால் கதிர்காம யாத்திரையின் பின் கதிர்காமத்தில் இருந்து கொண்டுவந்த வேலை வைத்து உருவாக்கப்பட்டது.கதிர்காம வேலவன் அருளின் விளைவாலே முருகன் ஆலயம் அச்சுவேலி நாவலம்பதியில் தோற்றம் பெற்றது. காடு மலை தாண்டி கதிரவன் திருவடி பணிந்து கதிர்காம வேலவன் வாக்கிற்கு இணங்கவே இவ்வாலயம் அமைக்கப்பட்டது. காட்டுமலை கந்தசாமி என்ற பெயர் வரவும் இதுவே காரணமாக அமைந்தது.
தல வரலாறு : காட்டுமலை கந்தசாமி கோயில் எண்பது வருடச் சரித்திரத்தை கொண்டது. நாவலம்பதியிலே வசித்த சீனியர் என்னும் அருளாளர் தமக்குற்ற தீரா நோயைத்தீர்க்கும் முகமாக 1928 ஆண்டு கதிர்காம யாத்திரையை மேற்கொண்டார். அக்காலம் இந்த யாத்திரை அச்சம் தருவதும், அருமையுடையதும் புனிதமுள்ளதுமான ஒரு தவப்பேறாகும். காடும் மலையும் கடந்த அருளாளர் சீனியர் அவர்கள் கதிர்காமத்தை அடைந்து, அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி அன்போடு கதிர்காம வேலவன் பவனி கண்டு கதிரமலை ஏறிக் கந்தனைத் தோத்தரித்து கற்பூரத் தீபமேற்றி விபூதிப் பிரசாதத்தோடு துணையாக வயது முதிர்ந்த ஒரு தம்பதிகளுடனும் ஊர் திரும்பினார்.
பண்டாரம் போல் வடிவம் தாங்கி வந்த தம்பதிகளுடன் நாவலம்பதிக்கு வந்து தாம் வதியும் மனைக்குச் சென்று(தற்போதைய மடம்) கால் கழுவி வர கிணற்றடிக்குச் சென்றனர். அவ்வேளை துணையாக வந்த வயது முதிர்ந்த தம்பதிகளைக் காணாது அருகில் உள்ள கொன்றை மரச் சோலையிலே தேடிப் பார்த்தார்.அவர்களைக் காணமுடியவில்லை.கந்தனையே வேண்டிய வண்ணம் தம்மனைபுகுந்தார்.
ஊழ்வினை வசத்தால் வந்த நோய்க்கு விபூதியே ஔடதமாக எண்ணி வாழ்ந்தார்.நோய் மேன் மேலும் வருத்தியது. கந்தன் கழலினையே தஞ்சமென எண்ணி நைந்துருகினார்.ஒரு நாள் கனவிலே முருகன் தோன்றி கதிர்காமத்திலிருந்து கொண்டு வந்த விபூதிப் பிரசாந்துடன் வேல் இருப்பதையும் அதனை ஒரு புனிதமான இடத்தைக் காட்டி அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீர்ந்து குணமடைவாய் எனக்கூறிப், அருளாளராகிய சீனியர் தாம் கண்ட கனவின் படியே 1929 ஆனித் திங்கள் 25 நாள் கதிரமலைக் கந்தனின் ஆலயத்தை நிறுவினார். கோவிலை நிறுவிச் சுவாமியை பிரதிஸ்டை செய்ததோடு தாமே பூசகராய் அமர்ந்து நித்திய பூசைகளையும் செய்தார். தமிழ் வேதமாகிய தேவார,திருவாசகத்தை மந்திரமாக கொண்டு அவர் அன்போடு செய்த பூசை வெகு விரைவில் பலனளித்தது. நோய் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அருளாளர் அகம் மிக மகிழ்ந்தார். காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தை எண்ணி வியந்தார்.
காட்டுமலைக் கந்தனின் அருட் செயல்கள் யாழ்குடாநாடு எங்கும் பரவுவதாயிற்று தீராத நோய்களைத் தீர்த்தருள வல்லான் என்ற செய்தி நாடெங்கும் பரவவே வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள் பலர் நீயே தஞ்சமென அடைக்கலம் புகுந்தனர். அருளாளர் சீனியர்,அப்பனை வணங்கி வெந்துயர் தீர்க்கும் விபூதியை அளித்து பலரை குணமாக்கினார். 1939 ஆம் வருடம் சிவப்பேறு அடைந்து விட்டார். அவரின் பின் அவரின் குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் நாவலம்பதி சைவப் பெருமக்களின் உதவியுடன் இக் கோவிலை நன்கு பரிபாலித்து வேண்டிய திருத்தங்களை செய்து அழகும், புனிதமும் பேணி நித்திய, பூசைகளில் கவனம் செலுத்தி வந்தனர். ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து 1971 ஆம் ஆண்டுவரை வேற்பெருமானுக்கு விசேட உற்சவமாக ஆனிப்பூரணையில் தீர்தோற்சவம் நிகழும் வகையில் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.
ஆனி அமாவாசையன்று தீர்த்தோற்சவம் திருவிழா நடைபெறுகின்றது. மேலும் பூங்காவனம்,வைரவர் உற்சவம் ஆகிய திருவிழாக்களும் சேர்த்து 27 தினங்கள் உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இவ் விழாக்கள் மட்டுமன்றி அம்பாளுக்குரிய நவராத்திரி பூசையும், திருவெம்பாவை, கார்த்திகை உற்சவம் , தைப்பூசம், கந்தஷஷ்டி ஆகிய காலங்களிலும், சித்திரை வருடப்பிறப்பன்று 1008 சங்காபிஷேகமும் விசேட பூசைகளாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சித்திரை பௌர்ணமி, மார்கழி மாதத்தில் காளி அம்பாளுக்கும்,வைரவசுவாமிக்கும் விசேட பொங்கல் பூசை சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தின் தீர்த்தத் திருவிழா புதுமையானது.செல்வச்சந்நிதி குமாரவேல் ஆலயத்தினின்றும் பெருகிவரும் தொண்டைமானாறு வல்லைப் பெரும்பாலத்துக் கூடாக அச்சுவேலிப் பகுதிக்குள் புகுந்து நாவலம்பதியை அடைந்து அப்பாலும் பாய்கிறது.நாவலம்பதியில் இந்த ஆறு வயல்களை உப்பாக்காதவாறு வரம்பெடுத்துத் தடுக்கப்பட்டுருக்கிறது. காட்டுமலைக் கந்தன் ஆலயத்திலிருந்து 3/4 கி.மீ தூரமுள்ள இவ் ஆற்றுப் படுக்கையில் புனிதமான ஒரு குன்று எப்போதும் கடும் வரட்சியுள்ள கோடைக்காலத்திலும் கூட சுரந்து கொண்டிருக்கின்றது.அதிகம் ஆழமில்லாத இக்குன்று சிறு கிணறு போலக் கட்டப்பட்டிருக்கின்றது.இப்புனித இடம் கூடக் கந்தனின் அருளால் கனவிலே காட்டப்பட்ட இடமாகும். இத் தீர்த்தத்துக்கு இன்னொரு விசேடமும் உண்டு கோவில் கட்டாப்பட்ட வருடத்திலிருந்து 1971ஆம் ஆண்டுவரை கொடியேற்றத் தினத்திலன்று இப் புனிதக் குன்றிலிருந்து தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டு அதுவே எண்ணெயாகத் திரி தோய்க்கப் பெற்றுப் பதினைந்து நாட்களும் தீர்த்த விளக்காக எரிக்கப் பெற்று வந்தது.
அருகிலுள்ள விமான நிலையம் : யாழ்ப்பாணம் ( பலாலி விமான நிலையம் )
அருகிலுள்ள ரயில் நிலையம் : யாழ்ப்பாணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை