காங்கேயநல்லூர், சுப்பிரமணியசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டம் வேலூர் டவுன் ரயில் நிலையத்திலிருந்து 6.5 கி.மீ தூரத்தில், காங்கேயநல்லூரில் அமைந்துள்ளது
மூலவர் : சுப்பிரமணியர், காங்கேயன்
உற்சவர் : சண்முகர்
தீர்த்தம் : சரவணப்பொய்கை
பாடியோர் : அருணகிரிநாதர்
தலச் சிறப்புகள் : மூலவர் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். சன்னதி முன் மண்டபத்தில் அருணகிரி இருக்கிறார். இவருக்கு தனி சன்னதி, துவார பாலகர் இருப்பது தனி சிறப்பு. அருணகிரியாரி வணங்கிய பின்னரே முருகனை வழிபடுகின்றனர்.விநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். 5 நிலைகளை கொண்டது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், நவ வீரர்கள், நாகர், பைரவர் போன்ற பிரகாரங்கள் உள்ளன. முருகன் வடக்கு கோபுரத்தின் எழுந்தருள்கிறார். அருணகிரியரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
தல வரலாறு : தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள். முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, “காங்கேயன்” என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார்.
அருணகிரியார் இத்தலம் வந்தபோது, சுவாமிக்குத் தயிர் சாத நிவேதனம் படைத்து பூஜை செய்து வழிபட்டார். அப்போது ஆறு அடியார்கள் அங்கு வந்தனர். அருணகிரியார், முருகனுக்கு படைத்த தயிர் சாதத்தை, அவர்களுக்கு படைத்தார். முருகனே இவ்வாறு ஆறு அடியார்களாக வந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் தற்போதும் இத்தலத்தில், முருகனுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஆறு அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. திருமுருக கிருபானந்த வாரியார் அவதரித்த புண்ணிய பூமி காங்கேயநல்லூர் ஆகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மலர் அணிவித்து தயிர் சாதம் நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : வேலூர் டவுன்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு